அவுஸ்ரேலியாவில் கோரவிபத்து இலங்கை மாணவன் ஸ்தலத்தில் பலி
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற கோரவிபத்தில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொழும்பில் பிறந்த 17 வயதுடைய கெல்வின் விஜயவீர என்ற மாணவனே உயிரிழந்தவனாவான்.
தொண்ணூறு வயது மூதாட்டியால் ஏற்பட்ட அனர்த்தம்
Carlingford Court பகுதியில் வாகனம் ஓட்டிவந்த தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர், கட்டுப்பாட்டினை இழந்து அருகிலிருந்த மரமொன்றுடன் மோதி, அப்பகுதியால் நண்பர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்த கெல்வின் விஜயவீரவை மோதினார் என்று கூறப்படுகிறது.
மரத்துடன் மோதிய வேகத்தில் மூதாட்டியின் வாகனம் கெல்வின் விஜயவீரவை இழுத்துச் சென்று எதிர்வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தோடு சேர்த்து மோதியிருக்கிறது. சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர், கெல்வின் விஜயவீரவின் சடலத்தை, எதிர்வீட்டில் நின்றுகொண்டிருந்த வாகனத்துக்குக் கீழிருந்து மீட்டிருக்கிறார்கள்.
மற்றுமொரு மாணவர் படுகாயம்
கெல்வினோடு நடந்து சென்றுகொண்டிருந்த மற்றுமொரு நண்பர் படுகாயங்களுடன் சிட்னி Westmead வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
வாகன ஓட்டியான தொண்ணூறு வயது மூதாட்டிக்கு சம்பவத்தில் எந்தக் காயங்களும் ஏற்படாதபோதும், சோதனைகளுக்காக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
Carlingford High School மாணவனான கெல்வின் விஜயவீரவின் மரணத்தினால் அவரது குடும்பத்தினரும் பாடசாலை நண்பர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.