மீண்டும் யுத்தத்தை தூண்டும் இனவாதிகள் - வலியுறுத்தும் பௌத்த பிக்கு
இனவாதத்தைத் தூண்டி விட்டு நாட்டில் மீண்டும் யுத்தத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக தடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (24) இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலை பௌத்த மரபுரிமைகளை கொண்டுள்ளது. மகாவம்சம் உட்பட பௌத்த வரலாற்று நூல்களில் குருந்தூர் மலை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இனவாதிகள்
1933 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குருந்தூர் மலையில் 78 ஏக்கர் நிலப்பரப்பு தொல்பொருள் மரபுரிமை என்று வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.
மறுபுறம் 1,250 ஹெக்டயர் நிலப்பரப்பை கொண்டுள்ள நாகசோல வனப்பகுதியில் பௌத்த மரபுரிமைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கு சட்ட அந்தஸ்த்துடன் காணிகளை வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள், தொல்பொருள் மரபுரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணி பிரச்சினைக்கு காணி ஆணைக்குழு ஊடாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும்.
பதிலளிக்க மறுத்த அமைச்சர்
இனவாதத்தை தூண்டி விட்டு நாட்டில் மீண்டும் யுத்தத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக தடுக்க வேண்டும். அது அனைவரது பொறுப்பாகும் என்றார்.
இந்நிலையில், குருந்தூர் மலை விவகாரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தவிர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.