விடுதலைப்புலிகள் தலைவரின் மகன் படுகொலை: நாடகமாடும் ராஜபக்ச: சாடும் சிறீதரன் எம்.பி
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பிஸ்கட் கொடுத்து கொன்றவர்களே ராஜபக்சவின் குடும்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) கடுமையாக சாடியுள்ளார்.
அத்துடன், நாட்டில் இனப்பிரச்சினையை தீர்த்திருக்க முடியும் என்பதில் வரலாற்றில் பிழைவிட்ட தலைவராக மகிந்த ராஜபக்ச திகழ்கிறார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மகிந்த ராஜபக்ச வருந்துவதாக செய்திகள் வெளிவந்திருப்பது. உன்னிப்பாக அவதானிக்கப்படவேண்டியது.
அப்பாவி மாணவன் குழந்தையாக இருக்கின்ற போது பிஸ்கட் கொடுத்து அவரை மிக அருகில் வைத்து சுட்டுக்கொன்றார்களோ, அதனை சிந்திக்காத மகிந்தவின் குடும்பம், இப்பொழுதாவது மகிந்த ராஜபக்சவின் வாயால் அதனை ஒரு கனதியான வேதனையாக வெளிப்படுத்தியிருப்பதை மிக அவதானத்துடன் பார்க்கிறோம்.
இந்த மண்ணில் மிகப்பெரிய மனிதப்பேரவலங்களை நடாத்துவதற்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பம் சார்ந்தவர்கள், இன்றாவது ஈழத்தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பாக மெல்ல வாய் திறக்க நினைப்பது காலமும் கர்மாவும் அவர்களுக்கு கொடுத்த தண்டனையாகவே கருதுகிறேன்.
ஜனாதிபதியாக அவர் இருந்த காலகட்டத்தில் யுத்தம் முடிந்த போது இந்த நாட்டில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை தீர்க்கக்கூடிய மிகப்பெரிய தலைவராக அவர் இருந்தார்.
அவருக்கு சிங்கள மக்களின் அதிகமான ஆதரவு இருந்தது. இனப்பிரச்சினையை தீர்த்திருக்க முடியும் என்பதில் வரலாற்றில் பிழைவிட்ட தலைவராக வாழ்கின்றார். அவர் இப்பொழுதாவது பிழையை உணர ஆரம்பித்திருப்பது வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக பார்க்கிறோம். ” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)