பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஸ்ரீலங்காவின் சவப்பெட்டி- புதிய திட்டத்தை ஆரம்பித்த “We Are ready” !
ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை - கல்கிசை பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் காட்போட் சவப்பெட்டிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.
ஸ்ரீலங்காவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்காக குறித்த காட்போட் சவப்பெட்டிகள் பயன்படுத்தப்படுவதாக தெஹிவளை - கல்கிசை மாநகர சபை தெரிவிக்கின்றது.
ஸ்ரீலங்காவில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த புதிய கண்டுபிடிப்பு முயற்சியை தாம் ஆரம்பித்ததாக தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் முதல்வர் பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.
இந்த காட்போட் சவப்பெட்டி 4,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதோடு, ஸ்ரீலங்காவில் மலிவான மரப்பெட்டியிலான ஒரு சவப்பெட்டி 25,000 முதல் 30,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த சவப்பெட்டி மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் உருவாக்கப்படுவதோடு, குறைந்த மரத்தாலான சவப்பெட்டியின் ஆறில் ஒரு பங்கு செலவில் உருவாக்கப்படுவதாக பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.
400 சவப்பெட்டிகளை உருவாக்க சுமார் 250 முதல் 300 மரங்களை வெட்ட வேண்டுமெனவும், ஆகவே அந்த சுற்றுச்சூழல் அழிவை தடுக்கும் வகையில், தான் இந்த விடயத்தை மாநகர சபையின் சுகாதார குழுவிடம் முன்மொழிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் வருமானத்தை இழந்துள்ள மக்கள் விலை உயர்ந்த மர சவப்பெட்டிகளுக்கு செலவிடுவது கடினம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சவப்பெட்டிகள் ஆரம்பத்தில் பெரும்பாலும் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டதோடு, பின்னர் இது சுற்றுச்சூழல் தொடர்பில் அக்கறை கொண்டவர்களிடையே மிகவும் பிரபல்யமடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து இதுவரையில் சுமார் 350 காட்போட் சவப்பெட்டிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளை செய்வதற்கு தேவையான சவப்பெட்டியை ”வீ ஆர் ரெடி” என்ற தன்னார்வ அமைப்பு இலவசமாக வழங்கி வருகின்றது. வட்ஸ்அப் குழுமம் ஊடாக இவர்கள் ஒன்றிணைந்து இந்த சமூக சேவையை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மாநகர சபை மாநகர சபையின் பொது சுகாதார பிரிவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தகவல் திரட்டு மத்திய நிலையத்திற்கும், மரணிப்பவர்களை தகனம் செய்வதற்காகவும் இவர்கள் சவப்பெட்டிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து கடந்த வருடம் இந்த குழுமத்தை ஆரம்பித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களையும் உதவிகளையும் செய்து வந்தனர்.
இந்த நிலையில், சவப்பெட்டிகளுக்கு பெரும் தொகை பணத்தை செலவிட வேண்டி ஏற்பட்டுள்ளதால், பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு உதவும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை அந்த அமைப்பு செயற்படுத்தி வருகின்றது.