கொரோனாத் தடுப்பூசி விடயத்தை தமது அரசியல் தேவைக்கு பயன்படுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!
கொரோனா தடுப்பூசி விடயத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா விடயத்தில் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதன் விளைவை இன்று மக்கள் எதிர்கொள்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
தடுப்பூசி விடயத்தை அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வதை முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா விடயத்தில் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதன் விளைவை இன்று நாட்டு மக்கள் எதிர்க் கொள்கிறார்கள்.
அரசியல்வாதிகளின் தேவைக்காக தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இளம் அமைச்சரின் தேவைக்காகவா பைஸர் தடுப்பூசிகள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி வழங்கலில் ஆரம்பத்தில் இருந்து முறைக்கேடுகள் இடம் பெற்றுள்ளன. பைஸர் தடுப்பூசி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கலாம் என அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாடசாலை மாணவர்களுக்கு துரிதமாக பைஸர் தடுப்பூசிகளை வழங்கி எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கையினை ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள் தங்களின் உரிமைகளுக்காகவே போராடுகிறார்கள். இவர்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. மாறாக ஆசிரியர்களை படுமோசமானவர்கள் என்றும், வைரஸ் பரவலை தீவிரப்படுத்தியவர்கள் என்றும் ஆளும் தரப்பினர் விமர்சிக்கின்றார்கள்.
இவை முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடு. ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துக் கொண்டதனால் தான் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக்கி மரணித்துள்ளார்கள் என அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளமை எதிர்கால தலைமுறையினரது கல்விக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே ஆசிரியர்கள் விவகாரத்தில் அரசாங்கம் கௌரவமாக நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.