இலங்கை அரசாங்கத்தை பொறுப்பு கூறவைக்கும் தீர்மானத்திலிருந்து பின்வாங்கிய மனித உரிமை ஆணையாளர்!
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இலங்கை அரசாங்கத்தை பொறுப்பு சொல்லவைக்கும் தீர்மானத்திலிருந்து மனித உரிமை ஆணையாளர் பின்வாங்கியிருக்கிறார்.
இலங்கையின் மனித உரிமை நிலவரம் மற்றும் ஆட்சியின் ஜனநாயக தன்மை பற்றி கவலைப்படும் அவரது உரை சிங்கள மக்களுக்கான ஜனநாயக வெளியை திறந்து கலக அரசியல் ஒன்றை இந்த அரசாங்கத்துக்கு எதிராக உருவாக்கும் எதிர்கால முயற்சியாக தெரிகிறதேயன்றி தமிழ் மக்களுக்கானதாக புரிந்துகொள்ள முடியவில்லை என குணா கவியழகன் தனது வலையொளி தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியல் விடயம் குறித்து தொடர்ந்து உரையாடிவரும் குணா கவியழகனின் மனித உரிமை சபையின் கூட்டத்தொடர் குறித்த அவதானமாக,
மனித உரிமைச்சபை 48வது கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது. அதில் மனித உரிமை ஆணையாளர் மிசெல் பச்லெட்டின் வாய்மொழிமூல அறிக்கை தமிழ்தரப்பில் மீண்டும் ஒருமுறை பலத்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் மனித உரிமை சபையில் மிசெல் பச்லெட் வைத்த பரிந்துரைகள் தமிழ்மக்களிடம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.
ஏனெனில் அவர் உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரைத்த விடயங்களும் அதனால் குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை இழுத்துச் செல்லப்படுமா என்ற எதிர்பாரப்பையும் உருவாக்கியது அவரது அறிக்கை. ஆனால், மனித உரிமை சபை நிறைவேற்றிய தீர்மானம் அதற்கேற்ப அமையவில்லை என்பது வேறுவிடயம். ஆயினும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தகவல் திரட்டும் ஒரு பொறிமுறையை அமைப்பதாக தீர்மானம் வெளியிடப்பட்டது.
மனிதவுரிமை சபைக்குள் வைத்து அரசியல் தீர்வைபெறலாம் என நம்பிக்கை ஊட்டுகின்ற தமிழ்த் தலைவர்கள் அதனை வரவேற்றனர். இது அடிப்படையானது எனவும், அவ்வாறு ஒன்று அமைவது எதிர்காலத்தில் இலங்கையை பொறுப்பு சொல்லவைப்பதற்கான சர்வதேச நீதிப்பொறிறையை அமைப்பதற்கான முதல்கட்டம் எனவும் தமிழ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதனை வரவேற்கவும் செய்தனர். இது ஒரு ஏமாற்று வேலை. ஏற்கனவே ஐ.நா.சபையிடம் போரிலே இழைக்கப்பட்ட அநீதி ஒரு இனப்படுகொலை என்பதை நிரூபிப்பதற்கான காணொளிகள் உட்பட போதியளவு ஆதாரங்கள் உண்டு. OISL அறிக்கைக்காக திரட்டப்பட்ட தகவல்களும் ஐ நா சபையிடம் உண்டு.
அப்படியிருக்க தகவல் திரட்டும் பொறிமுறையை அமைப்பது இலங்கை அரசாங்கதிற்கு ஒரு மிரட்டலைவிட்டு இலங்கை அரசாங்கத்தை மேற்குலக நாடுகளின் நலனுக்கு பணியவைப்பதற்கான நிகழ்ச்சித்திட்டமாக இருந்ததே தவிர இது தமிழர்களுக்கு பயனற்றது. இதை அப்போதே தெரிவித்திருந்தேன்.
மனிதவுரிமை சபையில் எமக்கு ஒரு அரசியல் தீர்வென்பது கிடைக்கமாட்டாது. அவ்வாறு உலகில் எந்த தரப்புக்கும் அரசியல் தீர்வு வழங்கப்பட்டிருக்கவில்லை. அது போலியாக எமது தமிழ்த்தரப்பை வைத்து கட்டமைக்கப்பட்ட ஒரு சூழ்ச்சியான பொறி. இவர்களின் தற்போதைய அறிக்கையில் இலங்கையின் மனித உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது.
இதில் குற்றம் புரிந்து ஜனாதிபதி அதிகாரத்தால் விடுதலை செய்ப்பட்டவர்கள் பற்றி கேள்வி எழுப்புகின்றது. அதே வேளை ஊடகவியலாளர்கள் சிவில் செயற்பாட்டடாளர்கள் சட்டவாளர்கள் அச்சுறுத்தப்படல் போன்றன இதில் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் தமிழ்மக்கள் பற்றி இவ்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. தமிழ் மக்கள் மீது பாயும் அரச அதிகாரம் பற்றி தமிழ் தலைவர்கள் சுட்டிக்காட்டிய விடயங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை.
இவ்வறிக்கை இலங்கை அரசை அதிகம் கண்டிக்காமல் அழுத்தம் கொடுக்கும் நிலையில் இருக்கிறது. கடந்த முறை மிரட்டல் தொனியில் இருந்தது. இம்முறை அழுத்தம் கொடுக்கும் நிலையில் உள்ளது. இதில் முக்கியமாக இலங்கையின் நீதிநிர்வாகச்செயற்பாடு கேள்விக்குட்படுத்தப்படுகிறது, ஆட்சியின் ஜனநாயகத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படுகிறது.
மேலும் மாணவர்கள், மதகுருமார், கல்விமான்கள், சட்டவாளர்கள் அச்சுறுத்தப்படும்நிலை உருவாக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை பற்றி குறிப்பிடவில்லை. 2009 போரில்நடந்த இனப்படுகொலைக்கான நீதிவிசாரணைகள் பற்றிய மெய்யான அக்கறையை காட்டவில்லை. மனிதஉரிமைசெயலகம் போர்குற்றம், இனப்படுகொலை விசாரணைக்கு பதிலாக இலங்கையின் மொத்த மனிதஉரிமை பற்றியே இப்போது அக்கறை கொள்கிறது என்பது தெரிகிறது அது எதனால்?
இதற்கான காரணம் கோட்டாபய அரசாங்கம் தமிழ்மக்களின் வாக்குகளால் பதவிக்கு வரவில்லை. மாறாக சிங்கள மக்களின் ஏகோபித்த வாக்குகளால் பதவியை பிடித்தவர் கோட்டாபய. 78ல் புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்பட்ட பின்பு தமிழ்மக்களின் வாக்குகள் இல்லாமல் ஒரு ஜனாதிபதி பதவிக்கு வரமுடியாது எனும் நிலை இருந்தது.
ஏனெனில் இருபெரும் சிங்கள கட்சி தலைவர்கள் போட்டியிடும்போது மூன்றாம் நிலையாக உள்ள தமிழ்பேசும் மக்களின் வாக்குகள்தான் வெற்றியை தீர்மானிப்பதாக அமைந்திருந்தது. ஆனால் கடந்த ஜனாதிபதிதேர்தலில் தமிழ்பேசும் மக்களின் ஆதரவு இல்லாமல் சிங்களவேட்பாளர் வெற்றிபெறமுடிந்தது. அவ்வாறே நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடிந்தது.
தமிழ்பேசும் மக்களின் வாக்குகள் இல்லாமல் யுத்த வெற்றியாளர் என்ற நாயக பிம்பத்தினால் இவர்கள் வெற்றிபெற்றதனால் இவர்களை தோற்கடிக்க, இவர்களுக்கு வழங்கப்பட்ட சிங்கள வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பது மேற்குலக நாடுகளுக்கு புரிகிறது. எனவே வருங்காலத்தில் ராஜபக்ச ஆட்சியை இல்லாமல் செய்வதற்காக சிங்கள மக்களிடையே ஒரு கலக அரசியலை உருவாக்க வேண்டும் என்ற கட்டாய நிலை மேற்குலகிற்கு எழுந்துள்ளது.
இலங்கை அரசாங்கம் இரண்டு வகையில் இதனை எதிர்கொள்ளும் .கருத்தியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் இருவகைகளில் கட்டுப்படுத்தும் முதலாவது கருத்தியல் ரீதியில் மேற்கு நாடுகள் தமிழ்மக்களின் பக்கம்நின்று சிங்கள மக்களையும் சிங்களமக்களின் எதிர்காலத்தையும் சிறிலங்காவையும் தண்டிக்கப்போகின்றது என்ற அலையை ராஜபக்ச தரப்பு உருவாக்குவதன் மூலம் சிங்கள மக்களை தமது பக்கம் ஒன்றுதிரட்டும் என்பது தெரியும்.
மேற்குலகத்தின் நண்பர்களாக ஐ.தே.க. மக்கள்சக்தி போன்ற எதிர் கட்சிகள் மேற்குலகத்துடனும் தமிழ்பேசும் மக்கள் தரப்போடும் இணைந்து சிறிலங்காவிற்கு எதிராக செயற்படுகின்றன என்ற கருத்தை விதைப்பதினூடாக மதபீடங்களையும், ஊடகங்களையும். சிங்கள தேசப்பற்றாளர்களையும் தங்கள் பக்கம் வைத்திருக்க செய்வர் . அதுதான் அவர்களுடைய பலம் அவ்வாறுதான் வென்றார்கள் அவ்வாறு தான் அரசியல்செய்யவும் முடியும்.
இதனை உடைப்பதாயின் சிங்கள மக்களுக்காக மனித உரிமை சபை பேச வேண்டும். தமிழ் மக்களுக்காக அல்லாமல் பொதுமையாக பேசவேண்டும். அது தான் இப்போது நடக்கிறது. . இரண்டாவதாக சிவில் அமைப்புக்களை அடக்குதவற்கான சில சட்ட விதிகளை அரசாங்கம் உருவாக்கும். அதனைத்தான் அரசு முயற்சிகிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மனித உரிமை சபை உருவாக்குகிறது.
பச்லேட்டின் உரையின் முக்கிய விடயமாக இது உள்ளது. ஏனெனில் சிங்கள் மக்களிடையே ஒரு ஜனநாயக வெளியை மனிதஉரிமைசபை உருவாக்கவேண்டியுள்ளது. அதன் மூலம் போராடுவதற்கான ஒரு பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் அரசாங்கதிற்கு எதிரான சிங்கள கலகக்காரர்களை உருவாக்கவும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும் இவர்கள் முயற்சிப்பார்கள்.
அழுத்த நிலைக்கு அரசாங்கத்தினை வைத்திருந்து ஒரு ஜனநாயக வழியைத் திறந்து சிங்கள மக்களை கலகக்காரர்களாக உருவாக்கி சிங்கள மக்களிற்குள் எதிர்க் கட்சியினை பலப்படுத்தி தருணம்வரும்போது தற்போதைய அரசாங்கத்தினை தோற்கடிக்கச் செய்வதுதான் மனித உரிமை சபையின் நகர்வாக இருக்கிறது என்ற சந்தேகத்தை வலுவாக்குகிறது.
தமிழ்தலைவர்கள் என கூறுவோரின் கோரிக்கைகளை அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை. மனித உரிமை அமைப்பு எவ்வாறு உலக அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்துகொண்டு ஐ.நாவின் இது அமைப்புக்களை நிந்திக்கும் மற்றும் குற்றம்சொல்லும் அரசியலை தமிழ் தரப்பு செய்தால் அதற்கு செவிசாய்க்கவேண்டிய குறைந்த பட்ச தேவையெனும் அவற்றிற்கு வரும்.
ஏனெனில் உலகளாவிய நன்மதிப்பை தன் அரசியலுக்காக அது கட்டமைக்க வேண்டியிருக்கிறது. மற்றது மீண்டும் தமிழ்தரப்பு தேவைப்படும்போது அவர்களுக்கு நம்பிக்கை அளித்து பொங்கி எழ வைக்க வேண்டியுள்ளது. எனவே தமிழ் தலைவர்கள் சிறந்த அணுகுமுறையாக மனித உரிமை சபையை மற்றும் ஐ நா சபயை அதன் பொறுப்பில் இருந்து விலகியதற்காக நிந்திக்கும் அரசியலை கூட்டாக முன்வைக்க வேண்டும் எனவும் தெனது கருத்தை முன்வைத்துள்ளார்.