ஐ.தே.கவினரால் உயிருக்கு ஆபத்து- நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்தப்பட்டதால் கடும் வாக்குவாதம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ருவன் விஜேவர்தன உள்ளிட்டவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஸ் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகரிடம் முறையிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்று தனது அலுவலகத்திற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபட்டதாக நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வடிவேல் சுரேஸ் தெரிவித்ததையடுத்து அவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த வடிவேல் சுரேஸ்,
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகல காரியவசம், ருவன் விஜேவர்தன கடந்த 08ஆம் திகதி எனது இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தனர். அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகளின் கைகளில் தடிகள் காணப்பட்டன. எனக்கு அச்சுறுத்தலையும் விடுத்திருந்தனர்.
இதுபற்றி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். இந்த சம்பவத்தினால் எனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. எனது கடமைகளுக்கு இடையூறு செய்திருக்கின்றதோடு இதுபற்றி வெலிக்கடை காவல்நிலையத்தில் முறையிட்டபோதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.
இந்த சம்பவத்தினால் எனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதால் விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க,
இந்த சங்கத்தின் பதவி நிலை குறித்து வழக்கு விசாரணை செய்யப்படுவதாகவும், ஆகவே அதுபற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டாம் எனவும் வலியுறுத்தினார். இதன்போது குறுக்கீடு செய்த வடிவேல் சுரேஸிற்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் சபையில் தெளிவுபடுத்தல் ஒன்றை செய்த இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவரான ஹரின் பெர்ணான்டோ, தனது அலுவலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி காவல்துறைக்கு முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் இதுவரை எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சபையில் சுட்டிக்காட்டினார்.