சபாநாயகரின் சான்றுரையையடுத்து அமுலாகியது நிதிச் சட்டமூலம்!
நாடாளுமன்றத்தில் கடந்த 07ஆம் திகதி நிதிச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் 2021ஆம் ஆண்டு 18ஆம் இலக்க நிதிச் சட்டமூலம் கையெழுத்திடப்பட்டு சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளது.
சபாநாயகர் கையெழுத்திட்டதன் மூலம் இந்த நிதிச் சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வருவந்திருப்பதாக நாடாளுமன்ற ஊடக முகாமையாளர் நிம்மி ஹாத்தியல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சட்டமூலத்தின் ஊடாக வெளிப்படுத்தபடாத சொத்துக்களை முதலீட்டுக்காக பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதிச் சட்டமூலம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டபோது ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நிதிச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பின் போது எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல வாக்கெடுப்புக் கோரியமையால் இந்தச் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.