அரசாங்கத்திற்கு நாளை முதலாவது பலப்பரீட்சை! பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவால் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைவாக வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13 ஆம் திகதி ஆரம்பமானது.
நாடாளுமன்றத்தில் ஏழு நாட்களாக நடைபெறும் விவாதம் நாளை 22ஆம் திகதி மாலையுடன் நிறைவடைகிறது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பையடுத்து நாளை மறுதினம் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவிருப்பதுடன், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதம் இடம்பெறும்.
வரவு - செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
வரவு - செலவுத்திட்டம் நடைபெறும் காலப்பகுதியில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்காக இவ்வருடம் வரவு - செலவுத் திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.