பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பிக்க - சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்
சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகளிலும் வேறு சில காரணங்களிலும் தான் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்காலம் தங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் சதித் திட்டம் நடப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கவை எதிர்கட்சித் தலைவராக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் செய்திகள் வௌியாகின.
இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் இருந்து செயற்படுவது பாட்டாளி சம்பிக்க ரணவக்க என்றும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்க எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யோசனை முன்வைக்கப்பட்டபோது, சஜித் பிரேமதாஸவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என நானே கடிதம் மூலம் கோரினேன்.
இன்று சஜித் பிரேமதாஸ எதிர்கட்சித் தலைவர் ஆசனத்தில் உள்ளார். நாம் ஒருபோதும் யார் மீதும் சேறு பூச செயற்படுவதில்லை. விமர்சனம் இருந்தால் அதனை நேருக்கு நேர் கூறுவோம்.
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் வருவாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. 2019ம் ஆண்டின் பின் நாம் அவருடன் கதைக்கவில்லை என்றார்.
இதேவேளை, எமது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அப்போது 2019இல் இருந்த சிறந்த தெரிவு சஜித் பிரேமதாஸதான். அதனால் நாம் அந்த செயற்பாடுகளை முன்னெடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தை அவரது நடவடிக்கைகளும் வேறு சில காரணங்களும் தீர்மானிக்கும் என்றும் குறிப்பிட்டார்.