நெருக்கடிகள் தீர முன்னர் மற்றுமொரு சிக்கலை எதிர்கொள்ளும் கோட்டாபய! திக்குமுக்காடும் ராஜபக்சக்கள்
சிறிலங்கா அரசியலில் ஒரு நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முன்னர் மற்றொரு நெருக்கடி தலை தூக்குவது அண்மைய நாட்களில் அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச தரப்பினர் கடுமையாக திணறி வருவதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர் ஒருவரை தலைமைப் பொறுப்பை ஏற்க அழைக்கவுள்ளதாக அந்த குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய கட்சித் தலைவரின் பெயர் இப்போது வெளியிடப்படாது என்று பேச்சாளர் கூறியுள்ளார். பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, புதிய இடதுசாரி முன்னணி மற்றும் ஏனைய கட்சிகள் புதிய அரசியல் கட்சியில் இணைந்து அங்கத்துவம் பெற இணங்கியுள்ளன.
இந்த தீர்மானம் கோட்டபாயவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக அதிகாரங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஜபக்ச தரப்பில் தற்போது கோட்டாபயவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுமே பதவியில் இருக்கின்றனர். எனினும், உருவாகும் நெருக்கடியானது மேலும் அவர்களுக்கு எதிர்கால அரசியல் இருப்புக்கு சிக்கலாக அமையும் என்றும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.