அமெரிக்காவில் கோட்டாபய - துபாய் பறக்கும் தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்?
அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அவசரமாக துபாய் சென்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர் துபாய் செல்ல உள்ளதாகவும் இவர்களில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜாங்க அமைச்சர் ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதுடன் பின்னர் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்த உறுப்பினர்களும் துபாய் சென்றுள்ளமை அரசியல் தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.