சூழ்ச்சியாளர்களை கைது செய்யுங்கள்! பெரும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை
தேர்தலை வெற்றிகொள்வதற்கு அரசியல்வாதிகள் மக்கள் உயிர்களை பணயம் வைத்தனரா என்ற சந்தேகம் எழுவதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2019ம் ஆண்டு தேர்தலை வெற்றிகொள்வதற்கான ஓர் சூழ்ச்சியாக ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழ்ச்சி குற்றச்சாட்டு உண்மை என்றால் மக்களின் வாழ்விற்கு ஆபத்து ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த கால தேர்தல்கள் அநேக சந்தர்ப்பங்களில் ஊழல் மோசடிகளினால் நிரம்பப்பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் தேர்தலை வெற்றிகொள்ள பணம், மதுபானம், உணவு, கூரைத் தகடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் லஞ்சமாக வழங்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் ஈஸ்டர் தாக்குதல் சூழ்ச்சித் திட்டம் உண்மையென்றால், தேர்தலில் வெற்றிகொள்ள மக்களை கொலை செய்த முதல் சந்தர்ப்பமாக இது அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
சூழ்ச்சியுடன் தொடர்புடையவர்களை கைது செய்யாவிட்டால் அது இலங்கை ஜனநாயகத்தை பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.