மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! ரணில் வெளியிட்டுள்ள அறிவித்தல்
காலிமுகத்திடலின் உள்ள போராட்டகாரர்கள் வன்முறையையே விரும்பினார்கள் அதனால்தான் அவர்களை அதிபர் மாளிகை வளாகப் பகுதியிலிருந்து இராணுவத்தினரும் காவல்துறையினரும் அகற்றியுள்ளனர் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டம் நேற்றுமுன்தினம் அதிபர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் ஆரம்பமாக முன்னர் அமைச்சர்கள் சிலருடன், காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, காலிமுகத்திடல் போராட்டத்தை நான் ஆதரித்தேன். பிரதமராகப் பதவியேற்க முன்னரும், பிரதமராகப் பதவியேற்ற பின்னரும் அவர்களை ஆதரித்தேன்.போராட்டத்தின் செயற்பாட்டாளர்கள் என்னைச் சந்தித்திருந்தனர். அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்திருந்தேன்.
கோட்டாபயவை வெளியேற்றி போராட்டம்
அந்தப் போராட்டத்தின் நோக்கம் அதிபர் பதவியிலிருந்து கோட்டாபயவை வெளியேற்றி போராட்டம் கடந்த 14ஆம் திகதி மாபெரும் வெற்றியுடன் முடிவுக்கு வந்துவிட்டது.
அதன் பின்னர் அதிபர் செயலக வளாகத்தில் அரசியல் பின்னணியுடன் கிளர்ச்சிக்கான ஆயத்தங்கள்தான் முன்னெடுக்கப்பட்டன. அங்கு நின்றவர்கள் வன்முறையை நாடினார்கள். அதனால்தான் அவர்களை அங்கிருந்து முப்படையினரும் காவல்துறையினரும் அகற்றியுள்ளனர்.
இப்போது அவர்கள் அமைதி வழியில் போராடுகின்றார்கள் என்றுகூறி, மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
