மற்றுமொரு நெருக்கடி -இலங்கையில் எரிபொருள் விநியோகம் சீர்குலையும் அபாயம்
இலங்கையில் டீசல் மற்றும் மண்ணெண்ணை ஆகிய எரிபொருட்களு்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வரும் நிலையில் மற்றுமொரு அதிர்ச்சிகர அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதன்படி இன்று (15) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பெற்றோலிய போக்குவரத்தில் பெரும் பகுதியை தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்களே மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமக்கான போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு தெரிவித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தனியார் தாங்கி உரிமையாளர் சங்கத்தினர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், டீசல் விலைஅதிகரிப்பை மாத்திரம் குறித்த கட்டண அதிகரிப்பின்போது கருத்திற்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
எனினும், டீசல் விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக, அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பையும் கருத்தில் கொண்டு தங்களுடைய கட்டணத்தை திருத்தியமைக்குமாறு தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அந்தக் கோரிக்கைக்கு இணங்கயிருக்கவில்லை. மேலும், இன்று மாலை இடம்பெற்ற இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தின்போது, தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர், தாங்கி உரிமையாளர்களுக்கான கட்டண திருத்தம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொலன்னாவ பெற்றோலிய வளாகத்திற்கு தனியார் தாங்கி உரிமையாளர்களின் வருகை இன்று குறைந்திருந்தது.
இதன் காரணமாக இன்று நிலுவையில் உள்ள எரிபொருள் கையிருப்புகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
