இந்தியாவிற்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸ்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகளை விஸ்தரிக்க சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவின் பிரதான சுற்றுலா சேவை கண்காட்சியான SATTE 2026 இற்கு இணையாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டன.
இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, தற்போது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்திற்கு சுமார் 90 விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அஹமதாபாத் நகருக்கான விமான சேவை
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தனது 10 ஆவது இந்திய இலக்காக அஹமதாபாத் நகருக்கான விமான சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 8 பிரதான நகரங்களில் 6 நகரங்களை சிறிலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளடக்கும்.

அத்துடன், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பாரிய சந்தையாக இந்தியா காணப்படுகிறது. மொத்தப் பயணிகள் போக்குவரத்தில் 30 சதவீதமும், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 23 சதவீதமும் இந்தியாவிலிருந்தே கிடைக்கப் பெறுகின்றனர்.
சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களுக்கு தற்போது நேரடிச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை
இந்த நிலையில், புதிய திட்டமிடல்கள் மூலம் இந்த ஆண்டில் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 12 சதவீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பயணிகளில் 30 சதவீதமானோர் கொழும்பை ஒரு இடைத்தங்கல் மையமாகப் பயன்படுத்துகின்றனர்.
இவர்களுக்காக மத்திய கிழக்கு நாடுகள், மாலைதீவு, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் தூர கிழக்கு ஆசிய நாடுகளுக்கான போக்குவரத்து வசதிகளை சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் பங்காளர் நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |