ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன - காவல்துறை ஊடகப் பேச்சாளர் விளக்கம்
போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்தே காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என கலவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலையில் போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்தே காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பவுசர் மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீ வைக்க முயற்சித்ததாகவும், பின்னர் கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியதாகவும் நிஹால் தல்துவ கூறினார்.
இந்த மோதலில் காவல்துறையினர் பலரும் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
