ரணிலின் அழிவுக்கான ஆரம்பபுள்ளி:விமல் வீரவன்ச கடும் விமர்சனம்
என்னையும், உதய கம்மன்பிலவையும் அமைச்சு பதவிகளில் இருந்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நீக்கினார்.அதுவே அவரது அரசாங்கத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளியானது. இந்த அரசாங்கத்தின் அழிவு ரொஷான் ரணசிங்கவை அமைச்சு பதவியில் இருந்து நீக்கியது முதல் ஆரம்பமாகியுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன எதிரணி நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்த்தில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தற்றுணிவுடன் செயற்பட்டதால்
கிரிக்கெட் துறையின் ஊழல் மோசடியை வெளிப்படுத்தி, தற்றுணிவுடன் செயற்பட்டதால் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சு பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டார்.

கோட்டாபயவின் நிர்வாகம் மோசமானது என்று குரல் எழுப்பப்பட்டதால் தான் ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிபர் மகுடம் சூட்டப்பட்டது. ஆனால், இன்று அனைத்தும் தலைகீழாக உள்ளது.
பல்வேறு போராட்டத்தின் ஊடாக அதிபர் மகுடம் சூடிய ரணில் விக்ரமசிங்க தனது உண்மை முகத்தை திங்கட்கிழமை காண்பித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டார்
பொருளாதார பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தாமல் சிறுபிள்ளை போல் கடந்த அரசாங்கம் செயற்பட்ட போது அதனை சுட்டிக்காட்டினோம்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றேன். தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சர்வதேச நிறுவனங்களில் உயர் பதவியைப் பெற்றுக்கொள்வார். நாட்டின் எதிர்காலம் குறித்து அவருக்கு அக்கறையில்லை என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 16 மணி நேரம் முன்