சிறுவர் இசைக்குழுவிற்கு தடை - மகளிர் இராஜாங்க அமைச்சர் கடும் எதிர்ப்பு
மெதிரிகிரிய பிரதேசத்தில் ஆஷாவரீ என்ற சிறுவர் இசைக் குழுவின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நன்னடத்தை திணைக்களம் மற்றும் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைக்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்
. கடந்த சில நாட்களாக சமுக வலைத்தளங்களில் இந்த பரபரப்பான இசைக்குழு பற்றி பேசப்பட்டு வருகிறது. திறந்த இசை நிகழ்ச்சிகளை நடத்தும் அளவிற்கு இந்த சிறுவர்கள் குழுவில் உள்ள சிறுமிகளின் திறன் மிக உயர்ந்த அளவில் உள்ளது.
16 வயதுக்குட்பட்ட சிறுமிகள்
எனினும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பயன்படுத்தி இசைக் குழுவை நடத்த முடியாது என தொழிலாளர் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தொழிலாளர் திணைக்களம் காவல்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து இசைக்குழுவின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கீதா குமாரசிங்க கடும் எதிர்ப்பு
இதேவேளை, குறித்த இசைக்குழுவின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமை சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. திறமையான குழந்தைகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள உறுதுணையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சிடம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
