எரிபொருளுக்கு மக்கள் வரிசையில் - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம் (படம்)
நாடாளுமன்ற அமர்வுகளின் போது நாரஹேன்பிட்டி காவல்துறை போக்குவரத்து பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை சீராகும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக குறுகிய காலத்திற்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென காவல்துறை மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் தொகையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் காவல்துறை போக்குவரத்துப் பிரிவுக்கு வழங்குவதாகவும், அதற்குரிய நிரப்பலுடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் ஒருவர் இணைக்கப்படுவார் எனவும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்திற்காக அறவிடப்படும் பணத்தை பெற்றுக்கொள்ளும் நிலையம், அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் அறிவிக்கப்பட்டது.
எரிபொருள் நிரப்பும் போது நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் நேரில் இருக்க வேண்டும் எனவும் கையில் உள்ள பணத்திற்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்பட வேண்டும் எனவும் காவல்துறை மா அதிபர் அலுவலகம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.