24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 15 கப்பல்கள்
கடந்த 24 மணித்தியாலங்களில் 15 கப்பல்கள் ஈரானின் அனுமதியுடன் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடந்ததாக ஈரானியப் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
இருப்பினும், தற்போதைய கப்பல் போக்குவரத்து விகிதமானது போர் தொடங்குவதற்கு முன்பிருந்த காலப்பகுதியை விட 90 வீதம் குறைவாகவே உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கப்பல் போக்குவரத்துப் பாதை முழுமையாக மூடப்படவில்லை என்றும் அது எதிரி நாடுகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி உள்ளிட்ட ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
போக்குவரத்துக் கட்டணம்
உதாரணமாக ஈரான் விதித்துள்ள எந்தவொரு கட்டுப்பாடுகளிலிருந்தும் அண்டை நாடான ஈராக்கிற்கு விலக்கு அளிக்கப்படுவதாக ஈரானின் காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இதற்கிடையில், இந்த நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குச் சுங்கக்கட்டணம் (Toll) விதிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஈரானிய அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

இது குறித்து ஈரானிய ஜனாதிபதி அலுவலகத்தின் உதவியாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், போரினால் ஏற்பட்ட அனைத்துச் சேதங்களையும் ஈடுசெய்யும் வகையில் கப்பல் போக்குவரத்துக் கட்டணத்தின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் போது மட்டுமே ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாகத் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |