போர்க்குற்றம் இடம்பெறவில்லை : பிரதி அமைச்சர் அருண ஜயசேரகவிற்கு வலுக்கும் எதிர்ப்பு
இலங்கையில் எந்த விதமான போர் குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி அமைச்சர் கூறிய விடயத்தை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை. போரின் போது நிகழக்கூடாத சில விடயங்கள் நடந்திருக்கலாம் என பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளிக்கும்போதே சுகாஷ் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர்க் குற்றங்கள் மாத்திரமல்ல, அதையும் தாண்டிய இனப்படுகொலை
இலங்கையில் இடம்பெற்றது போர்க் குற்றங்கள் மாத்திரமல்ல, அதையும் தாண்டிய இனப்படுகொலை. சிங்களப் பேரினவாத அரசானது, இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழினத்தை திட்டமிட்ட வகையில் அழித்துக் கொண்டு வருகின்றது. அதனைத்தான் நாங்கள் இன அழிப்பு அல்லது இனப்படுகொலை எனக் கூறுகின்றோம்.
பிரதி அமைச்சர் உண்மையை அறியாதவராக கதைக்கவில்லை. நடந்தது என்ன என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் நடந்த இனப்படுகொலையினுடைய பங்காளிகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் மாத்திரம் கிடையாது. பிரதி அமைச்சர் சார்ந்த ஜனதா விமுக்தி பெரமுனவும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
ஜேவிபிக்கும் இனப்படுகொலைக்கு பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு
ஏனென்றால் யுத்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைத்துக்கும் மாறி மாறி முண்டு கொடுத்தவர்கள் இந்த ஜேவிபியினர்.
சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த பொழுதும் அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோதும் அவர்களுடைய ஆட்சியை பலப்படுத்துவதற்கான ஆதரவை ஜேவிபி வழங்கி இருந்தது. இவர்களும் ஆட்சியாளர்களுடைய பங்காளிகளாக இருந்து இனப்படுகொலைக்காக பங்காற்றியவர்கள் தான். இனப்படுகொலைக்கு பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு ஜேவிபிக்கும் இருக்கிறது.
ஆகவே பிரதி அமைச்சருடைய கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கையில் நடைபெற்றது போர் குற்றத்தையும் தாண்டிய இனப்படுகொலை. இதற்கு முற்றுமுழுதான சர்வதேச விசாரணை தான் தீர்வாக அமைய முடியும் - என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
