சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம் : சிஐடி வெளியிட்ட முக்கிய தகவல்
சப்ரகமுவ பல்கலைக்கழக (Sabaragamuwa University of Sri Lanka) மாணவனின் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு (CID) தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்ற 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவன் உயிர்மாய்த்துக் கொண்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, அவர் 28 ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
பின்னர், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறம் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதற்கமைய, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழகத்தின் சில சிரேஷ்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகம் உட்பட பல தரப்பினரிடமிருந்து விசாரணை அதிகாரிகள் வாக்குமூலங்களையும் பதிவு செய்தனர்.
மாணவனின் மரணம்
அதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், மாணவனின் தவறான முடிவுக்கு பகிடிவதையே காரணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மாணவன் மன அழுத்தத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள சில உயர் அதிகாரிகள், பல்கலைக்கழகத்திற்குள் நடக்கும் பகிடிவதை சம்பவங்கள் வௌியே செல்லாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகிடிவதை விசாரணை பிரிவுக்கு 30இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 10 இற்கும் மேற்பட்ட பெரும்பாலானவை சப்ரகமுவவில் இருந்து கிடைத்துள்ளதாகவும் தெரியந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
