உழவு இயந்திரத்தில் பாடசாலை செல்லும் மாணவர்கள்
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் பாடசாலை பேருந்து சேவை இன்றி மாணவர்கள் பாடசாலை செல்வதில் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிகந்த, மதுரங்கலை, மலிந்த, சுசிரிகம ஆகிய கிராமங்களில் கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் இருநூறு பாடசாலை மாணவர்கள் உழவு இயந்திரத்தில் பாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது.
உழவு இயந்திர சாரதிக்கு மூவாயிரம்

இக்கிராமங்களின் பாடசாலை மாணவர்கள் செவனப்பிட்டிய, வெலிகந்த, மானம்பிட்டிய கல்லூரிகளுக்குச் செல்வதுடன், ஒவ்வொரு பிள்ளையும் தமது கிராமங்களிலிருந்து செவனப்பிட்டிக்கு செல்வதற்கு ஒவ்வொரு மாதமும் உழவு இயந்திர சாரதிக்கு மூவாயிரம் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது.
2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொலன்னறுவை டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றதாகவும், பேருந்து நிறுத்தப்பட்டதன் பின்னர் போக்குவரத்து வசதிகள் இன்றி தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
பேருந்து சேவை நிறுத்தம்

சுமார் 1000 குடும்பங்களைச் சேர்ந்த 200 பிள்ளைகள் இந்தக் கிராமங்களிலிருந்து செவனப்பிட்டிய, மானம்பிட்டிய, வெலிகந்த ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்கின்றனர், மேலும் அவர்கள் பேருந்தில் பயணித்தால், மாதாந்திர சீசன் டிக்கெட்டுக்கு 800 ரூபாய் தேவைப்படுகிறது, ஆனால் உழவு இயந்திரத்தில் சென்றால் சாரதிக்கு 3000 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பெற்றோர்கள். குறிப்பிடுகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் பொலனறுவை டிப்போ அத்தியட்சகர் டி.ஏ. பிரேமசிறி இது தொடர்பில் தெரிவிக்கையில், அந்த கிராமங்களுக்கு சேவையை வழங்க போதிய பேருந்துகள் இல்லாதது, சாரதிகள் மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்று கூறினார்.