திடீரென ஊரடங்கு பிறப்பிப்பு: துயரத்தின் மத்தியில் மக்கள்
நாட்டில் திடீரென ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் சாப்பாடு இன்றி அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மஹரகமவில் பௌத்த பிக்குகள் உட்பட பலர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இது தொடர்பில் சமூக ஊடகங்களிலும் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது. குறுகிய நேரத்தில் பொது மக்கள் தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்தவற்கு முண்டியடித்தனர்.
எனினும் அன்றாடம் உழைத்து உண்ணும் மக்களுக்கு இது பெரும் சுமையாக மாறியிருக்கிறது. உடனடியாக அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாமல் பலர் தவிப்பதை காண முடிந்தது.
அதுமாத்திரமன்றி குறுகிய நேரத்தில் ஊரடங்குச்சட்டம் நடைமுறைக்கும் வந்ததால் மக்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்தநிலையில், பல குடும்பங்கள் உணவின்றி தவிப்பதாகத் தெரியவந்துள்ளது.
அத்துடன், வீதியோரங்களில் இருப்பவர்களும் யாசகம் பெற்று வாழ்பவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.