கடல் மற்றும் தரை மார்க்கமான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள சுமந்திரன்!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை சகல கமநல சேவை அலுவலகத்திற்கு முன்னாலும் போராட்டங்கள் நடத்த தீர்மானித்துள்ளோம். அதேபோல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை கடலில் படகுகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(M.A.Sumanthiran) தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தெடார்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் உரத்தினை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள். குறிப்பாக தென் பகுதியிலும் இந்த பிரச்சனையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தென் பகுதியில் விவசாய அமைச்சுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது நாட்டில் உள்ள கொவிட் தொற்று காரணமாக மக்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வது நல்ல விடயம் அல்ல அது சமூகப் பொறுப்புக்கும் மாறானது என்பதை கருத்தில் கொண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து கமநல சேவைத் திணைக்களங்களுக்கும் முன்னால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மாத்திரம் ஒரே நேரத்தில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 28 கமநல சேவை நிலையங்கள் இருக்கின்றன. அனைத்து நிலையங்களுக்கும் முன்னால் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சமூகப் பொறுப்போடு சமூக இடைவெளியினை பின்பற்றி தற்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அரசுக்கு எதிரான போராட்டத்தினை அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் செய்யவுள்ளோம்.
தெற்கில் உள்ள ஏனைய எதிரணி அரசியல் தலைவர்களுடன் பேசி உள்ளோம். எதிர்க்கட்சித் தலைவருடன் பேசி உள்ளோம் அவர்களும் தங்களுடைய பிரதேசங்களிலும் இவ்வாறான பிரச்சினை காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக தமது பகுதியில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அதாவது எமக்கு பசளை கிடைக்கும் வரை போராட்டங்களை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்.
அதேபோல் வடக்கு மீனவர்கள் அத்துமீறிய இந்திய இழுவை படகுகளினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்திய மீனவர்களின் வருகையினை நிறுத்துவதற்கு ஏற்கனவே சட்டமூலம் இயற்றப்பட்டு உள்ள நிலையில் அதனை அரசு நடைமுறைப்படுத்த தயங்குகின்றது.
கடற்தொழில் அமைச்சராக ஒரு தமிழ் அமைச்சர் உள்ளார் ஆகவே அதனை நடைமுறைப்படுத்துவது மிகவும் இலகுவான விடயம். ஆனால் அவர் அதனை செயற்படுத்தாதன் காரணமாக இந்திய இழுவைப் படகுகளின் தொல்லை வடக்கு பகுதியில் மீனவர்களை பெரிதாக பாதிக்கின்றது.
எனவே குறித்த சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு கடலில் இருந்து கடல் வழியாக படகுகளில் சென்று அரசுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம். அனைத்து போராட்டங்களுக்கும் எமது மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.