அமெரிக்க மத்தியஸ்த்தை கோரினாரா சுமந்திரன்? வெடித்தது புதிய சர்ச்சை
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முன்னெடுப்புகளில் அமெரிக்க மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமென தான் தெரிவித்ததாக வெளியாகும் செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நிராகரித்துள்ளார்.
உள்ளூர் ஊடகமான தி ஐலண்ட் பொய்யான தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைக்க வேண்டுமெனவும், அந்த தீர்வுகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் மத்தியஸ்தராக அமெரிக்கா இருக்க வேண்டும் எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளதாக தி ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த முன்மொழிவுகளுக்கு ஆதரவைப் பெறுவதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பெச்லெட் பதவியில் இருப்பது பெரும் நன்மை என சுமந்திரன் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தங்களின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரம் ஒதுக்கிக் கேட்டதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது எனவும், தான் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவில்லை எனவும் எம்.ஏ சுமந்திரன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தி ஐலண்ட் பத்திரிகையில் குறித்த செய்திக்கு பொறுப்பான தினசேன ரத்துகமகே இவ்வாறு பொய்யான செய்தியை வெளியிடுவது இது முதன்முறை அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தி ஐலண்ட் அவதானம் செலுத்த வேண்டுமெனவும், தவறான செய்தியை பிரசுரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எம்.ஏ சுமந்திரன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸை சந்தித்த சமயத்தில், வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண சபை அமைப்பு போதுமானதாக இல்லை எனவும், இணைந்த வட கிழக்கு மாகாண சபையை தமிழ் மக்கள் நிர்வகிக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்பில் அமெரிக்க தூதுவருடன் பேசிய சம்பந்தன், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதில் சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தியிருந்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் குறைகளைத் தீர்க்க அனைத்து அரசாங்கங்களும் தமது வாக்குறுதிகள் தொடர்பில் நேர்மையாக செயற்படவில்லை எனவும், இந்த பிரச்சினை பல தசாப்தங்களாக இழுத்துச் செல்லப்படுகிறது எனவும் எம்.ஏ சுமந்திரன் இந்த சந்திப்பில் அமெரிக்கத் தூதுவரிடம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
This is an absolutely false story. To start with, I have not been in Jaffna after 1 Aug 2021! This is not the first time #Dinasena_Ratugamage has published mischievous stories like this in @TheIsland concerning @TNAmediaoffice https://t.co/6M8BoYbhOc
— Abraham Sumanthiran (@MASumanthiran) August 27, 2021