ரணிலின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
2024 ஆம் ஆண்டுக்கான அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறுகிய கால இலாப நோக்கமின்றி வீழ்ச்சியடைந்த தேசிய பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தின் ஆரம்பமாகும் என்று துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், குறுகிய கால இலாப நோக்கம் இன்றி, வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தின் மேலும் ஒரு ஆரம்பத்தையே இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் எடுத்துக்காட்டுகின்றது.
தேர்தலுக்கான வரவு செலவுத்திட்டம் அல்ல
இந்த வரவு செலவுத்திட்டத்தில் அதற்கு அவசியமான திட்டங்கள் உட்பட கொள்கைகள் மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒரு சிலர் இதனை தேர்தலுக்காக முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் என்கின்றனர். ஆனால் இது அவ்வாறு தேர்தலை எதிர்பார்த்து சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் அல்ல.
அவ்வாறு தேர்தலுக்காக முன்வைக்கப்பட்ட ஒன்றாக இருந்தால், அபிவிருத்தி தொடர்பான அனைத்தையும் மறந்து பொருளாதார ரீதியில் மேற்கொள்ள வேண்டிய பாரிய தீர்மானங்களை எடுக்காமல், பொது மக்களுக்கு பணத்தை அச்சடித்தேனும் நிவாரணங்களை வழங்கியிருக்கும். இது அவ்வாறானதொரு வரவு செலவுத்திட்டமல்ல.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உட்பட மக்கள் போராட்டங்கள் போன்றவற்றினால் நாட்டில் அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத் தன்மை இல்லாமல்போனது.
அவ்வாறு அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத் தன்மை இல்லாமல்போன ஒரு நாட்டுக்கு நிதி உதவிகளோ, கடன் வசதிகளோ மற்றும் முதலீடுகளோ கிடைப்பதில்லை.
நாட்டைக் கட்டியெழுப்பும் பயணம்
இவற்றை சரியாக முகாமைத்துவம் செய்ய அன்று இருந்த ஆட்சியாளர்களினால் முடியவில்லை. அதனால் அவர்கள் பதவி விலகினர். அப்போது, அதனை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை எதிர்கட்சிக்கு வழங்க நாங்கள் முன்வந்தோம். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அந்தச் சந்தர்ப்பத்திலே தான் அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்தக் கடினமான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவரின் கொள்கையை அவர் தெளிவாக முன்வைத்தார்.
குறுகிய கால, பிரபல்யமான வேலைத்திட்டங்கள் அன்றி, நீண்டகால அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களையே தான் செயற்படுத்தவதாக அவர் எடுத்துக்காட்டினார்.
இந்தக் கொள்கையுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் முன்னோக்கிச் செல்லும்போது மேலே குறிப்பிட்டவாறு பாரிய அளவில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர் நிவாரணங்களையும் வழங்கியுள்ளார்.
தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தையும் செயற்படுத்தினார்.
அதேபோன்று நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருந்த பல்வேறு விடயங்களை அகற்றி அபிவிருத்தியை நோக்கி நாட்டைக் கொண்டு செல்வதற்கு அவசியமான பின்புலத்தையும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்வைத்துள்ளார்” - என்றார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்