ரணிலை ஆதரித்தால் அமைச்சு பதவி - தேர்தல் கால மோசடிகள் அம்பலம்
தேர்தல் கால மோசடிகள்
அதிபரை தேர்வுசெய்வதற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தால் அமைச்சு பதவிகளை வழங்குவதாக அரசாங்க தரப்பில் இருந்து வாக்குறுதி வழங்கப்பட்டதை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொண்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்றம் இடைநடுவில் கலைக்கப்படாது என்ற உறுதி மொழியை வழங்கியே ஆளும் பொதுஜன பெரமுனவின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“கடந்த 20 ஆம் திகதி அதிபரை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மக்களின் நிகழ்ச்சி நிரலுக்கு தேவையான வேலைத்திட்டங்களை உறுதி செய்யும் வகையிலேயே நாம் செயற்பட்டோம்.
அரசாங்கம் அல்லது அதிபரை அதிகாரத்திற்கு தெரிவு செய்வதற்கு முயற்சித்த குழுவினர் தமது பாதுகாப்பு மற்றும் தமது நிலைத்தன்மை மற்றும் தமது அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதை கருத்தில் கொண்டே செயற்பட்டனர். உண்மையில் நாட்டில் அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை இல்லை.
உண்மையில் கூறுவதாயின், நாடாளுமன்றத்தில் உள்ள கருத்தும் வெளியே இருக்கும் கருத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
ஆகவே தான் ஒராண்டுகால சர்வகட்சி ஆட்சியின் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு சென்று, புதிததாக மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்துகொண்டு, நாட்டிற்கான பொறுப்பையும் ஆட்சியையும் கையளிக்கப்பட வேண்டும் என்று நாம் கூறினோம்.
ரணிலை ஆதரித்தால் அமைச்சு பதவி

எனினும் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்ற உறுதிமொழியை வழங்கினர்.
வன்முறைகளில் அழிவடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவது, வீடுகளை மீள நிர்மாணிக்கும் போது அரசாங்கத்தின் அனுசரணை வழங்குவது, தேவையான முழுமையான பாதுகாப்பை வழங்குவது உள்ளிட்ட உறுதி மொழிகளும் வழங்கப்பட்டிருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதான கோரிக்கைகளாக இவை இருந்தன.
அதனை நிறைவேற்ற ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்ட பின்னணியிலேயே அவருக்கு பெரும்பான்மை கிடைத்தது. எமது அணியிலுள்ள சிலருக்கும் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள், பிரதிநிதிகள் தொடர்புகொண்டு வாக்குறுதி வழங்கியுள்ளனர்.
ரணில் விக்ரமிசிங்கவிற்கு வாக்களித்துவிட்டு அமைச்சரவை பொறுப்புக்களை ஏற்பதற்கு வாருங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை நிராகரித்த எமது உறுப்பினர்களுக்கு எமது கௌரவத்தை வழங்குகின்றோம்” என்றார்.