மேல் நீதிமன்ற நியமனங்கள் குறித்து அதிருப்தி - ரணிலுக்கு அனுப்பப்பட்ட கடிதம்
மேல் நீதிமன்றத்திற்கு வழங்கப்படவுள்ள உடனடி நியமனங்களுக்கு முன்மொழியப்பட்ட சில பெயர்கள் குறித்து இலங்கை நீதிச் சேவை சங்கம் தமது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
தற்போது நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக கடமையாற்றும் டிக்கிரி ஜயதிலக்க மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த மற்றுமொரு அதிகாரியின் பெயர்கள் குறித்த நான்கு பெயர்களில் உள்ளடங்கியிருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிய முறைப்பாட்டுக் கடிதத்தில் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதித்துறை நியமனம்
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,
“டிக்கிரி ஜயதிலக்க, கடந்த 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளராக பதவி ஏற்கும் வரை, நீதிவானாக பதவி வகித்திருந்தார்.
சட்டபூர்வமற்ற நிறுவனத்திற்கு அவர் நியமிக்கப்பட்ட நிலையில், எதிர்காலத்தில் எந்த நிலையிலும் நீதித்துறையின் உறுப்பினராக மீண்டும் சேர்த்துக்கொள்ள தகுதியற்றவர்.
இதற்கிடையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரியின் நியமனத்தை பார்க்கும்போது, 'நீதித்துறை சிரேஸ்ட நிலையில் உள்ளவர்களை காட்டிலும் அவர் மிகவும் இளைய அதிகாரி” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
