ட்ரம்ப் பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் கைது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், டிரம்ப் இரகசிய சேவை மற்றும் சட்ட அமலாக்கத் துறையைப் பாராட்டியதோடு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முதற்பெண்மணி மெலனியா ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
சந்தேக நபர், கலிபோர்னியாவின் டொரன்ஸைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன் டி.சி.யின் காவல்துறைத் தலைவர் ஜெஃப்ரி டபிள்யூ. கரோல், அந்த நிகழ்வு நடைபெற்ற ஹோட்டலில் அவர் ஒரு விருந்தினராகத் தங்கியிருந்ததாகவும், விசாரணையின் ஒரு பகுதியாக அவரது அறை வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் கைது செய்யப்பட்ட ஆயுதம் ஏந்திய நபர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என அமெரிக்க வழக்கறிஞர் ஜீனைன் பிரோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் சந்தேக நபர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என ஜீனைன் பிரோ குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தில் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரி ஒருவர் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பரபரப்பு சம்பவம்: வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு - இலக்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப்..!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |