தமிழர் பகுதியொன்றில் தனிமையில் இருந்த பெண்ணை தாக்கி கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்!
மட்டக்களப்பில் (Batticaloa) வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பெண் மீது தாக்குதல் மேற்கொண்டு பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கல்லடி பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (20) அதிகாலை வேளையில் குறித்த சம்பவமானது இடம்பெற்றுள்ளது.
வீட்டில் தனிமையில் தங்கியிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையான பெண் ஒருவரின் வீட்டின் கதவை உடைத்து பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து அங்கிருந்து இரண்டு கோடி 40 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ஒன்றேகால் பவுண் சங்கிலி 29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி ஓடியள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாரிய கொள்ளை
கல்லடியை சேர்ந்த 62 வயதுடைய சுப்பையாபிள்ளை கோணேஸ்வரி 1990 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து சுவிஸ் நாட்டுக்குச் சென்ற குடியேறி அங்கு தாதியாகவும் கணவன் பொறியலாளராகவும் மகள் விஞ்ஞானியாகவும் பணியாற்றிவருகின்ற நிலையில் அவர் தாதியரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் இலங்கையிலுள்ள தனது வீட்டை பார்ப்பதற்காக இலங்கைக்கு திரும்பி விஜயம் செய்து வீட்டில் தற்காலிகமாக தனிமையில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து வந்த பெண் குறித்த வீட்டில் தனிமையில் இருந்தமையை அறிந்த கொண்ட கொள்ளையர்கள், ஜன்னல் கதவினை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சுமார் இரண்டரை கோடி ரூபா பணம் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு காத்தான்குடி காவல் நிலைய குற்றத்தடுப்பு காவல்துறையினர் தடயவியல் பிரிவு மற்றும் மேப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்