இல்லத்தரசிகளுக்கு அமைச்சர் வழங்கியுள்ள ஆலோசனை!
நாட்டுக்கு தேவையான சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலைமையில், வீட்டுப் பெண்கள் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (Sanath Nishantha) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வாரியபொல பெண்கள் அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சுருக்கமாக கூற வேண்டும் என்றால், எம்மால் இறக்குமதிகளை செய்ய முடியாத அளவுக்கான நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது.
நான் 24 வருடங்களாக மக்கள் பிரதிநிதியாகவும் ராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றேன். இதுவரை எமது வீட்டில் சமையல் அறையில் விறகு அடுப்பிலேயே சமைக்கின்றோம்.
நான் தொகுதி அமைப்பாளராக இருக்கும் ஆனமடுவை தொகுதியில் தேவைக்கு அதிகமாக விறகுகள் இருக்கின்றன.
நவகத்தேகம, கருவலகஸ்வெவ, வண்ணாத்துவில்லு போன்ற இடங்களில் உள்ள சிலர் எரிவாயுவிலேயே சமைக்கின்றனர். விறகுகளை பெற்றுக்கொள்ளக் கூடிய நிலைமையில் இது நடக்கின்றது.
வீடுகளில் சமையல் எரிவாயு மூலம் பெறப்படும் ஒரு தீயிலும் எமது நாட்டின் டொலர்கள் எரிந்தே வெளிநாடுகளுக்கு செல்கின்றன.
இதன் காரணமாகவே விறகு அடுப்பை பயன்படுத்துவது சிறந்தது என நான் கூறுகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.