உங்களால் தான் இது சாத்தியமானது : அநுரவுக்கு பாகிஸ்தான் பாராட்டு
2026ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் சுமுகமாக நடைபெறுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மேற்கொண்ட இராஜதந்திர முன்னெடுப்புகளே காரணம் என குறிப்பிட்டு பாகிஸ்தான் அரசு நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு அமைச்சர் மொஹ்சின் நக்வி (Syed Mohsin Raza Naqvi) நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது குறித்து பாகிஸ்தான் தயக்கம் காட்டிய நிலையில், ஜனாதிபதி அநுரகுமார பாகிஸ்தான் பிரதமரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பின்னரே அந்தத் தீர்மானம் மாறியதாக நக்வி குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் உண்மையான நாயகன்
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நக்வி, "ஜனாதிபதி பேசிவிட்டார், இனி எந்தப் பிரச்சினையும் இல்லை, நாம் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் கூறினார்.

உங்களால் தான் இந்தப் போட்டி சாத்தியமானது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் என சுமார் 200 கோடிக்கும் அதிகமான மக்களை இந்தப் போட்டி மகிழ்வித்துள்ளது. நீங்கள்தான் இந்த நிகழ்வின் உண்மையான நாயகன்" என ஜனாதிபதியைப் பாராட்டினார்.
கிரிக்கெட் விளையாட்டையும் தாண்டி, முதலீடு, சுற்றுலா மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
பாகிஸ்தான் வழங்கிய ஆதரவு
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பாகிஸ்தான் அணியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், 'டித்வா' சூறாவளி போன்ற இக்கட்டான காலப்பகுதிகளில் இலங்கை மக்களுக்கு பாகிஸ்தான் வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |