ஆப்கானில் தலிபான்கள் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் - மாணவிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தபின், 6ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது கல்வி கற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அனைத்து மாணவ மாணவர்களுக்குமான பள்ளிகளும் இந்த வாரம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலிபான் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆப்கானிஸ்தான் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி அனைத்து வகுப்புகளிலும் பெண் குழந்தைகள் கல்வி பயில அனுமதிக்கப்படுவார்கள். புதன்கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்.
கல்வி அமைச்சகம் அதன் குடிமக்கள் அனைவரும் கல்வி பெறும் உரிமையை உறுதியளிக்கிறது. எல்லா வகையான பாகுபாடுகளை அகற்ற அமைச்சகம் கடினமாக உழைத்து வருகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, ஆப்கானிஸ்தான் சுகாதார மற்றும் கல்வி அமைச்சகங்களிலும் பெண்கள் பணிபுரிய தலிபான் ஆட்சியாளர்கள் அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காபூல் சர்வதேச விமான நிலையத்திலும் பெண்கள் பணி புரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தனியார் மற்றும் அரசு சாரா உதவி நிறுவனங்களிலும் பெண்கள் பணிக்குத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தாலிபான் அரசின் மற்ற அமைச்சகங்களில் பெண்கள் பணிக்குத் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
