அமெரிக்காவால் நீக்கப்பட்ட அமைச்சை மீண்டும் உருவாக்கிய தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான இராணுவ நடவடிக்கையின் போது நீக்கப்பட்ட ‘அறம் பரப்புதல் மற்றும் தீய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான அமைச்சை’ தலிபான்கள் மீண்டும் உருவாக்கியுள்ளனர்.
இந்த அமைச்சைத் தலிபான்கள் மீண்டும் உருவாக்கியுள்ளமை அனேக ஆப்கானியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
1996 முதல் 2001 வரையான காலப்பகுதியில் இவ்வமைச்சின் ஊடாக இஸ்லாமிய சட்டத்தைத் தலிபான்கள் கடுமையாக அமுல்படுத்தியமையே அவர்களது அச்சத்திற்கான காரணம் என நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
‘இஸ்லாத்திற்கு சேவை செய்வதே முக்கியம். அதனால் ‘அறம் பரப்புதல் மற்றும் தீய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு தனியான அமைச்சு’ அவசியமெனக் குறிப்பிட்டுள்ள ஆப்கானிஸ்தானின் மத்திய பிராந்தியத் தலைவர் முகமது யூசுப், ‘இஸ்லாமிய சட்ட விதிகளின் படி தண்டனைகள் வழங்கப்படும்.
அவற்றில் பெரும்பாவங்களுக்கான தண்டனைகளும் அடங்கும். இஸ்லாமிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அமைதியான நாட்டை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம்.
அமைதியும் இஸ்லாமிய விழுமியங்களுமே எங்களது ஒரே விருப்பம்’ என்றுள்ளார்.
தலிபான்கள் ஆப்கானை ஆட்சி செய்த போது பெண்கள், ஆண் பாதுகாவலர் இன்றி வெளியில் செல்லத்தடை விதிக்கப்பட்டிருந்ததோடு, புர்கா அணிவதும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.
வேளா வேளைக்கு தொழுவதும் ஆண்கள் தாடி வளர்ப்பதும் கண்டிப்பாக அமுல்படுத்தப்பட்டது.
இது தொடர்பில் கண்காணித்து சட்டத்தை அமுல்படுத்தவென தெருவுக்கு தெரு நல்லொழுக்கம் தொடர்பான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்றும் நியூயோர்க் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவால் சீக்கப்பட்ட அமைச்சரவையை மீண்டும் தலிபான்கள் ஆரம்பித்துள்ளமை அமெரிக்காவுக்கு சவால் விடுவதாகவும், அமெரிக்கா தோல்வியை ஏற்றதாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.