சிறிலங்கா அரசை ஆட்டம்காண வைத்த ஒன்ராறியோ 'தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்' - ஒன்றிணைந்த அமைப்புக்கள்!
தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் தொடர்பான சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீடு சவாலுக்குட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக கனேடிய தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கனடா, ஒன்ராறியோவின் “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்” தொடர்பான சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டை சவாலுக்குட்படுத்த 60 க்கும் மேற்பட்ட தமிழ் கனேடிய அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன.
தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் 2019 ஏப்ரலில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை உறுதிப்படுத்தவும் அட்டூழியங்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப்பட்டது.
இனப்படுகொலை அட்டூழியங்கள் தொடர்பில் விழிப்புணர்வு
இருப்பினும், சட்டமாக இயற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே தமிழர் இனப்படுகொலை கல்வி வாரம், அரசியலமைப்பு சவாலை எதிர்கொண்டது. பல சிங்களக் குழுக்கள் இந்த சட்டம், அரசியலமைப்பிற்கு முரணானது எனக் கூறி, ஒன்ராறியோவின் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.
இருந்தபோதும், ஒன்ராறியோ உயர்நீதிமன்ற நீதியரசர் அக்பரலி, இந்த மனுவை நிராகரித்தார். இதன் மூலம் கல்வி வாரம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த கல்வி வாரம் மீண்டும் சட்ட சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முன்னர் மனுத்தாக்கல் செய்த அதே குழுக்கள் கல்வி வாரத்தை எதிர்த்து ஒன்ராறியோவின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.
தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைவு
இதனையடுத்து கடந்த வார இறுதியில், கனடியத் தமிழர்களின் தேசிய சபை, தமிழ் இளைஞர் அமைப்பு, கனடிய தமிழ் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் கனேடியத் தமிழ் கல்வியகம் உட்பட்ட 60 அமைப்புக்கள் நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளன.
நிகழ்வின் இறுதியில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், வரலாறு மீண்டும் மீண்டும் நினைவூட்டுவது போல், குற்றவாளிகள் எப்போதும் இனப்படுகொலையை மறுத்துள்ளனர்.
இனப்படுகொலையை மறுக்கும் போர்க்குற்றவாளிகள்
இது தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை மையமாகக்கொண்ட யோசனை 104ஐ இலக்காகக் கொண்ட திட்டமிட்ட முயற்சியாகும். எப்போதும் தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்கள் தமிழ் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை மௌனமாக்குவதில் தீவிரமாக செயல்படுவதை இது காட்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இனப்படுகொலையின் பத்து நிலைகளில், மறுப்பு என்பது இறுதிக் கட்டமாகும், அது எப்போதும் இனப்படுகொலைக்கான உறுதியான குறிகாட்டிகளில் ஒன்றாகும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.