யாழில் சிறைவைக்கப்பட்ட 55 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 55 தமிழக மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்பான வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தமிழக மீனவர்கள் 55 பேரும், தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாதகால சிறைத் தண்டனை விதித்து நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
இதேவேளை, அவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 5 வருட காலத்தில் மீண்டும் இலங்கை கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால், அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான் பணிப்புரை விடுத்தார்.
அவர்களை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் 18, 20 ஆகிய திகதிகளில் ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குசென்ற தமிழக மீனவர்கள் 55 பேர் நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
