மீண்டும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டம் - தமிழ்நாட்டில் கைதான நபர்கள்!
இந்தியாவின் தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூன்று ஆதரவாளர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான நவீன் என்கிற எம். சக்கரவர்த்தி, ஜே சஞ்சய் பிரகாஷ் மற்றும் கபிலர் என்ற கபிலன் ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆயுதப் போராட்ட நோக்கம்
இந்த குற்றப்பத்திரிகை மே 19 அன்று, சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையப் பகுதியில் வாகன சோதனையின் போது, இரண்டு, நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிப் பொடிகள் என்பன மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு என என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது விடுதலைப்புலிகளின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தும் நோக்கத்துடன் புலிகளைப் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க விரும்பியதாக தெரியவந்துள்ளதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை உள்நாட்டுப் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கைத் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளைக் குறிக்கும் மே 18 அன்று வேலைநிறுத்தம் செய்யவும் இவர்கள் திட்டமிட்டதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.