முதல் நாளே முற்றுப்பெற்றதா தமிழ்க் கட்சிகளின் பேச்சு - தமிழருக்கான தீர்வில் மௌனம் கலைக்க மறுக்கும் சிறிலங்கா!
தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில், தொடர் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாளிலேயே முன்னேற்றமின்றி நிறைவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய கட்சிகளுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கம் இடையிலான இந்த பேச்சுவார்த்தை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
அரச தரப்பு மௌனம்
ஏற்கனவே தமிழ்க்கட்சிகள் முன்வைத்த, படையினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, மற்றும் காணாமல் போனோர் விடயம் என்பவற்றுக்கு, நேற்றைய கூட்டத்தில் அதிபர் தரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மேலும் ஒருவார காலம் அவகாசத்தை அதிபர் தரப்பு கோரியமைக்கு அமைய, பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுதந்திர தினத்திற்கு முன் தீர்வு
இந்த பேச்சுவார்த்தை நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெறும் என்று ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியன்று இடம்பெறவுள்ள 75 வது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
பொருளாதாரம்
அவ்வாறு இல்லையேல், 2040 ம் ஆண்டு வரை இந்தப்பிரச்சினை நீடித்துச் செல்லும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் பொருளாதார முன்னேற்றத்துக்கு நல்லிணக்க செயற்பாடுகள் முக்கியமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
