13 ஆம் திருத்தத்திற்கு அழுத்தம் கொடுப்பதிலிருந்து தமிழ் கட்சிகள் நழுவல்? புதிய வரைபை தயார்படுத்தியுள்ளதாக அறிவிப்பு
தமிழ் பேசும் தரப்புக்களின் கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருான எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக கூறியுள்ளார்.
எனினும் ரெலோ தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியை தாமே மேற்கொண்டது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு அறிக்கையை வெளியிடுவதன் மூலம் முயற்சிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ் பேசும் தரப்புக்களின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கு நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்ட 8 விடயங்கள் தொடர்பில் தலைவர்களுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டதுடன், அதனை புதிய ஆவணமாக தொகுத்து தயாரிக்கும் பணிகள் சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
ரெலோவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேச்சுக்களின் போது, தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த ஆவணத்தின் தலைப்பு '13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோருதல்' என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தம் தீர்வாகாது எனவும் அதனையும் தாண்டிய அதிகார பகிர்வு அவசியம் எனவும் பொதுவெளிகளில் கருத்து வெளியிட்டிருந்த எம்.ஏ.சுமந்திரன், ரெலோவின் முயற்சியையும் பொது வெளியில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதன்பின்னணியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் எட்டுப் பக்க ஆவணங்களுடன் திடீரென பங்குகொண்ட எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட குழுவினர், தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தனர்.
இதன்போது 13 ஆவது திருத்தத்தை தலைப்பில் இட்டமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழரசு கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இதன்பின்னணியில் இந்தியப் பிரதமரிடம் கையளிக்கப்படுவதற்கென தயாரிக்கப்படும் ஆவணமானது, “தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்” என தலைப்பிடப்பட்டுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் அறிக்கையொன்றின் ஊடாக கூறியுள்ளார்.
புதிய வரைவு தயாரிக்கப்பட்ட போது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது என எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைபாகவே உள்ளதுடன் இந்த வரைபை அல்லது அதன் திருத்ததை கட்சிகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இது கைச்சாத்திடப்படும் என அவர் கூறினார்.
சில ஊடகங்கள் தொடர்ந்தும் தவறான தலைப்பில் இது குறித்த செய்திகளை வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ. சுமந்திரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஏனைய அனைத்து கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை எட்ட வேண்டும் என்ற நோக்குடன் அமைதிகாக்கும் நேரத்தில் எம்.ஏ.சுமந்திரன் மாத்திரம் முந்திக்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதன்மூலம் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சி மற்றும் அதில் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் தம்மிடம் இருப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த எம்.ஏ.சுமந்திரன் முயற்சிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.