தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் கட்சி - மகிழ்ச்சியில் மனோ கணேசன்
இது “தேர்தல் வரையிலான உறவு”, ஆகவே தேர்தல்கள் முடிந்த பின் உடைய வேண்டும் என்று எதிர்பார்த்த வினோதமானவர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள். அவர்களை நாம் இன்று ஏமாற்றி இருக்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan)தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு மின்சூள் சின்னம் கட்சியின் சின்னமாக வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, த.மு.கூ கட்சியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பில் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சித் தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று ஆறு ஆண்டுகளைக் கடந்ததுள்ளது.
இந்நிலையில் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், ஒரு அரசதலைவர் தேர்தல், ஓர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்நாட்டின் தேசிய அரங்கில் தவிர்க்க முடியாத ஓர் அரசியல் இயக்கமாக வளர்ந்து, இன்று தேசிய தேர்தல் ஆணைக் குழுவினால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், தேசிய அரங்கில் ஒன்றுசேர வேண்டும் என்ற பேராசை இன்று தமிழ், முஸ்லிம் மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றி இருப்பதை நான் அறிவேன்.
எமது மக்களின் இந்த மன உணர்வுக்கு உயிர் கொடுத்து முழு நாட்டுக்கும் முன்மாதிரியாக நாம் இன்று நிற்கிறோம்.
பல சவால்களுக்கு மத்தியில் ஆறு ஆண்டுகளைக் கடந்து, எம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு விடை கொடுத்து விட்டு, புதியவர்களை உள்வாங்கி, எமது தேசிய பயணத்தை மாத்திரம் நிறுத்தி விடாமல் பயணித்து, இன்று அதிகாரபூர்வ பதிவையும், தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்குப் பின்னால் எங்கள் ஒவ்வொருவரினதும் கடும் உழைப்பு, நேர்மை, துணிச்சல், தூரப்பார்வை, நிதானம், இன உணர்வு ஆகியவை இருக்கின்றன.
எங்கள் மின்சூள் சின்னம், நாடு முழுக்க இருளை அகற்றி ஒளி பாய்ச்சும் இயக்கமாக இன்னமும் முன்னேற்றம் பெற அனைத்து உடன்பிறப்புகளினதும் ஆதரவுகளை எதிர்பார்க்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்.


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 நாட்கள் முன்
