ரணகளம் ஆறாத கறுப்பு ஜூலை -இன்னும் ஆறாத வலிகளுடன் தமிழர்கள்
ஈழத்தமிழரின் வரலாறு என்று சொல்லப்படுவது வலிகளாலும் வேதனைகளாலும் பல ஆயிரக்கணக்காண அப்பாவித்தமிழர்களின் உயிர்ப்பறிப்புகளையும் கொண்டு அவர்கள் சிந்திய இரத்தத்தினால் எழுதப்பட்டதொன்றாகும்.
அது வரலாற்று வழி நெடுகிலும் தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த நிலத்தின் ஒரு தேசிய இனம் என்பதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஶ்ரீலங்காவின் சிங்கள பௌத்த இனவாத விசமூறிய பிரஜைகளால் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்டதையும் இருப்புகள் அழிக்கப்பட்டதையும் அதன் பின் பல ஆண்டுகளின் பிற்பாடு தங்கள் தேசிய வீரர்களாக கொண்டாடிய நவீன துட்டகைமுனுக்களையும் நா வளைந்த படியெல்லாம் தூற்றி துரத்தி அடித்தமையும் கண்கூடு.
ஶ்ரீலங்காவின் தேசியக்கொடியில் வாளேந்தி நின்ற சிங்கம்

இன்று ஒற்றுமைபேசி ஒன்றுபட்டு நிற்க அழைக்கும் இது சிங்களத்து சகோதரர்களின் அப்பாக்களும் தாத்தாக்களுமாக சேர்ந்து தமிழர்களின் இரத்தங்களை குடித்து இலங்கையின் பௌத்தம் காவி உடுத்திக்கொண்ட நாளொன்றின் கதை இது.
ஶ்ரீலங்காவின் தேசியக்கொடியில் வாளேந்தி நின்ற சிங்கம் வரலாற்றுக்காலம் தொட்டு சிங்களத்தின் வேருக்கு நீர்பாய்ச்சிய ஶ்ரீலங்காவின் தலைநகரில் தமிழர்கள் வாழ்ந்த தெருக்கள் தோறும் கொலைகள் செய்து கொன்று குவித்து தமிழரின் தடம் அழித்து தன் பசி தீர்த்துக்கொண்டது.
தென்னிங்களையின் தெருவெங்கிலும் ஊழியின் ஓலம் எழச்செய்து பரிநிர்வாண புத்தனை இரத்தங்களால் மடைபரவி கண்களை கொய்து படையிட்ட நாளொன்றின் காலம் கடந்தும் தீரா வலிகளின் கதை கறுப்பு ஜூலை.
ஜே.ஆர் ஜெயவர்தனவின் பகிரங்க பரப்புரை

“ யாழ்ப்பாணத்தமிழர்களைப்பற்றி எனக்கு அக்கறையில்லை அவர்கள் நசுக்கப்படுவதில் எனக்கு கவலையுமில்லை தென்னிலங்கை வாழ் சிங்களவர்களை பற்றியே நான் அக்கறை கொள்வேன் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கஸ்ரப்படுகிறார்கள் என்பதில் சிங்கள மக்கள் மகிழ்கின்றார்கள் என்றால் அவர்களை மகிழ்விக்கும் செயலை நான் நிச்சயம் செய்வேன் ” என்ற அன்றைய ஶ்ரீலங்காவின் அரசதலைவர் ஜே.ஆர் ஜெயவர்தனவின் பகிரங்க பரப்புரைக்கமைய 1983 ம் ஆண்டு ஜூலை மாத இறுதி வாரத்தின் நாட்களை கொலைகள் நிறைந்த கறுப்பு நாளாக வரலாற்று பக்கங்களில் சிங்களவர் பதிவு செய்து கொண்டனர்.
அன்றைய சிங்கள அரசு திட்டமிட்டே தீட்டிய தமிழினப் படுகொலையின் உச்சமான இந்த நாள் இது தமிழரின் பொருளாதாரத்தை அடியோடு நசுக்க சிங்களம் ஆடிய பலியிடல் என்று சொல்லாம் .
தென்னிலங்கையில் பற்றிய தீ

1983 ம் ஆண்டு ஜூலை 23 ம் திகதி பின்னிரவு 11 .35 மணியளவில் யாழ்ப்பாணத்தில் தின்னைவேலி பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் ஶ்ரீலங்கா இராணுவத்தினரின் ரோந்து படைகளின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு பழி தீர்க்கவென சுமார் ஒன்றரை மணி நேரங்களின் பின்பதாக அப்பிரதேசத்தின் வீடுகளிலிருந்த 41 அப்பாவித்தமிழர்கள் கண்மூடித்தனமாக ஶ்ரீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து ஏற்கனவே தாம் தீட்டிய திட்டங்களை நடைமுறைப்படுத்த அன்றைய இலங்கை அரசின் தலைவர் மற்றும் அமைச்சர்களின் காய் நகர்த்தல்களின் பின்னனியில் 24 ம் திகதி இரவு வேளை முதற்கொண்டு தென்னிலங்கையில் தமிழர் வாழ்ந்த தெருக்களில் கூரிய ஆயுதங்களோடு சிங்களவர்கள் களமிறக்கப்பட்டு ஒன்றாக வாழ்ந்த மனிதகுலத்தில் வேற்றுமையை தூவியது அரச இயந்திரத்தின் இனவாத விடம் தோய்ந்த கரங்கள்.
தென்னிலங்கையில் பற்றிய தீயின் நாக்கில் கொழுந்து விட்டெரிந்தது தமிழரின் பொருளாதாரம் தீயில் கருகியது தமிழரின் உரிமை மட்டுமல்ல பரிநிர்வாணம் கண்ட பௌத்த தர்ம போதனைகளும் தான்.
தமிழர்களின் சொத்துக்கள் அழிப்பு

நிச்சயமாக அன்று புத்தன் தான் பேசாமல் சித்தாத்தனாகவே இருந்திருக்கலாமோ என எண்ணியிருப்பார் அந்த அளவிற்கு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டன அந்த காட்சிகளை இலங்கையின் ஆயுதப்படைகள் கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தன.
அந்த இரவு தொடங்கி நீண்டு படர்ந்த தமிழ் இன அழிப்பின் கறுப்பு நாட்களில் தமிழருக்கு சொந்தமான சுமார் 5000 வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டன , சுமார் 8000 க்கும் அதிகமான வீடுகள் எரிக்கப்பட்டன. இன்றைக்கு 39 ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்தப்பட்ட இக்கொடூர நிகழ்வுகளால் அன்றைய மதிப்பில் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தமிழர்களின் அசையும் அசையா சொத்துக்கள் அழித்தொழிக்கப்பட்டன .
நிர்க்கதியற்ற நிலையில் பாதி எரிந்து மீதி தொலைந்து நீதியற்ற தேசத்தில் பாவிகளாய் பரதேசிகளாய் பரிதவித்தனர் தமிழர்கள் அன்று. மனதை உலுக்கிய படுகொலைகள் எண்ணிலடங்காதவையாக மரணவலி தந்த வன்முறைகள் மனிதகுலம் செய்திட மறுத்த வலிகளை தந்தது சிங்களம்.
கடைகள், வீடுகள், தமிழர்களின் உடல்கள் என்பன தீயில் சாம்பலாயின. சிங்கள தேசத்தின் ஆழ்மனதில் வேரூன்றிய கொடூர எண்ணங்கள் தீயாக வெளித்தோன்றின. தமிழர் வாழ்ந்தபகுதி எங்கிலும் மரணவோலம் வானை முட்டிட தமிழரின் குருதி கொழும்பில் பெருகி ஓட இரசித்தது சிங்கள அரசு.
குட்டிமணி தங்கத்துரை, ஜெகன் கொடூரமாக கொலை

இரத்தவெறி அடங்காத பௌத்ததேசம் இரத்தம் உறையும் காரியங்கள் பலவற்றை முன்னின்று செய்து முடித்தது. வெலிக்கடை சிறைச்சாலை மதில்களை தாண்டியும் சிறைக்கம்பிகளையும் தகர்த்து தமிழ் கைதிகள் மீது வெறிகொண்டு தாக்கினர்.
தம் இனவெறி தீரும்வரை அந்த சிறையின் மத்தியில் அமர்ந்திருந்த புத்தருக்கு தமிழரின் இரத்தத்தால் அபிசேகம் செய்து தமிழர் போராட்ட தலைவர்களான குட்டிமணி தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்டோரை மிக கொடூரமாக கொலை செய்தனர். கண்களை பிடுங்கி புத்தரின் காலடியில் போட்டு தம் கால்களால் நசுக்கினர் கொலைப்பசி தீரும்வரை கொல்லப்பட்டும் அடித்தும் துரத்தப்பட்டனர்.
நிர்க்கதியான தமிழர்களில் உயிர் தப்பியவர்கள் கப்பல்களில் ஏறி தாயகத்தின் காங்கேசன்துறை வந்த போதே ஒருமித்த நாடும் ஒற்றையாட்சிக்கோட்பாடும் புனித நீராப்பூமிக்கடியில் புதைக்கப்பட்டு விட்டன .
தமிழர்களுக்கென்றொரு நாடு தேவை என்பதை அன்றைய பொழுதுகளில் மலையகம் உட்பட தமிழர் தாயகத்திற்கு அப்பால் வாழ்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ள தலைப்பட்டனர் . வரலாற்றின் பக்கங்களில் கரிய துன்பியலாகவும் தமிழர்கள் தங்கள் வாழ்நாளில் மறக்கவே இயலாத கொடூரங்களும் அரங்கேறிய 1983 ம் ஆண்டின் கறுப்பு ஜூலை படுகொலைகளின் போது 400 பேர் வரையிலானவர்களே கொல்லப்பட்டதாக அரச ஆவணங்கள் கூறுகின்ற போதிலும் சுயாதீன அறிக்கை தரவுகளின் படி சுமார் 3000 ற்கும் அதிகமானவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதாக பதிவாகியிருக்கிறது.
சுமார் 150000 தமிழர்கள் அகதிகளாக புலம்பெயர் தேசங்களுக்கு இடம்பெயர்ந்தனர். உலகமெங்கிலும் பரவி வாழும் ஈழத்தமிழர்களின் உலகப்பரவலுக்கும் மூன்று தசாப்த கால தமிழீழ போராட்டத்திற்கும் மிக முக்கியமான ஒரு காரணம் என அன்றைய ஐக்கிய தேசியக்கட்சி அரசின் பூரண ஆசிர்வாத ஆதரவோடு நடந்தேறிய இப்படுகொலைகளை கூறிவிட முடியும் .
கொடுகொலை ஆயுதம் ஏந்திய சிங்களவர்களின் தமிழர்கள் மீதான இன அழிப்பின் சாட்சியங்களாய் இன்றுவரை வாழ்பவர்கள் நம்மில் ஏராளம்.
26 ஆண்டுகளில் முள்ளிவாய்க்காலிலும்

அந்த வலிகள் ஆண்டுகள் ஆயிரம் ஆன போதிலும் என்றென்றும் மறையப்போவதில்லை தமிழர் நிலங்களில் காலந்தோறும் ஶ்ரீலங்கா அரச படைகளாலும் அரச ஆதரவு ஒட்டுக்குழுக்களாலும் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் பல என்றாலும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் கொலை செய்யப்பட்டது இதுவே முதல் முறை.
அதன் தொடர்ச்சியகவே 26 ஆண்டுகளில் முள்ளிவாய்க்காலிலும் அரங்கேற்றப்பட்டது ஈழத்தமிழர் ஒவ்வொருவர் நெஞ்சக்கூட்டிலும் வலியது மேவி உளமது வெந்து தணலாய் காத்திருக்கிறது.
நீறு பூத்த நெருப்பாய் சிங்கள தேசம் எங்களை அறுத்துக்கொன்று அம்மணமாக்கிய நாள். கறுப்பு யூலை என எங்களின் ஆழ்மனதை என்றென்றும் வருத்திடும் துன்பியல் மிகு நாட்கள் நிகழ்ந்து வலியாக படர்ந்து இன்று 40 ஆண்டுகள் ஆகிறது.
இத்தனை கடந்தும் இன்றுவரை சிங்கள தேசம் நமக்குச்சொல்லும் ஒரே செய்தி இது உங்கள் நாடு அல்ல என்பது மாத்திரமே
அந்த சொல்லொணாத்துயரம் நிழ்ந்தேறி ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஆறாத வலியோ ஆறாகி பெருகிறது .
வலிகளோடு வாழும் தமிழ் இனத்தின் வலிகளை வரலாற்றுக்கு கடத்தும் ஐபிசி தமிழ் மாண்டு விட்ட மனித ஆன்மாக்களை நினைந்து அஞ்சலிக்கிறது.