நாளையதினம் ஆசிரிய சேவைக்கு 13 ஆயிரம் பேர் நியமனம்
ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சுமார் 13,000 பட்டதாரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் சேவையில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
அவர்களில் 5,500 பட்டதாரி ஆசிரியர்கள் உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக ஆசிரிய சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர். அத்துடன், கல்வியியற் கல்லூரிகளில் பயின்று சித்தியடைந்த 7,500 பேருக்கு நாளை (16) புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
5,500 பட்டதாரி ஆசிரியர்கள்
விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல், வர்த்தகம் போன்ற பாடங்களை கற்பிக்க 35 வயதுக்குட்பட்ட 5,500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பௌதீக வளங்களுடன் மனித வளத்தை பூர்த்தி செய்வதன் மூலம் மாத்திரம் பாடசாலை முறையை அபிவிருத்தி செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வியை அபிவிருத்தி செய்ய மாணவர்களின் ஒழுக்கம் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
மேலும், சமூகத்தில் உள்ள போதைப்பொருள் பாவனை போன்ற தவறான நடத்தைகள் மற்றும் தகாத நடத்தைகள் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும் புதிய தலைமுறையினரிடையே உள்ள ஒழுக்கமற்ற நடத்தையை மத ரீதியான அணுகுமுறை மற்றும் புரிதல் மாற்றத்தின் மூலம் மாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
பாடசாலை நிர்வாகத்தில் அதிபருக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் எனவும், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் அல்லது பழைய மாணவர் சங்கங்களின் தேவையற்ற மற்றும் அதீத ஈடுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அது பொருத்தமற்றது எனவும் தெரிவித்தார்.
