தெல்தெனிய யுவதி மரணம்! சந்தேகநபரின் குற்றப்பின்னணியை வெளியிட்டது காவல்துறை
அண்மையில் தெல்தெனியவில் கார் ஒன்றினுக்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பல்வேறு நிதி மோசடி வழக்குகளிலும் தேடப்பட்டு வருபவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
பல்லேகல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபரும், அவரது 35 வயதுடைய மனைவியும் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

ஜூன் 17 அன்று தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் வாகனம் ஒன்றினுள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணின் மரணம் குறித்த விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு விபரங்கள்
இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறுதல், வாகன இறக்குமதி மற்றும் வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகப் பொய் வாக்குறுதி அளித்து இந்த சந்தேக நபர் இதற்கு முன்னர் பலரிடமும் பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை காவல்துறையினர் பின்வருமாறு வெளியிட்டுள்ளனர்.
- கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் 11.87 மில்லியன் ரூபாய் மோசடி மற்றும் மோட்டார் கார் ஒன்றை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
- புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் 1.72 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பான ஒரு வழக்கும், 1.37 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பான மற்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளன.
- திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் வாகன இறக்குமதியுடன் தொடர்புடைய 2.2 மில்லியன் ரூபாய் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.
- குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்ட நான்கு தனித்தனி வழக்குகள் புதுக்கடை, ஹொரண மற்றும் கடுவெல நீதவான் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
- வெளிநாட்டுப் பயண வாக்குறுதி அளித்து மேற்கொள்ளப்பட்ட 4.2 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பான வழக்கு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், தெல்தெனிய மரணம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 7 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்