த.தே.ம.முன்னணியின் முகம் சுழிக்கவைக்கும் கேலிக்கூத்துக்கள்!!
இலங்கை தேசம் என்பது தமிழ் மக்களின் உயிருக்கும், உரிமைகளுக்கும் உத்தரவாதம் இல்லாத ஒரு இடம் என்பது உலகமே அறிந்த ஒரு விடயம்.
தமிழ் மக்களின் இருப்பும், அவர்களது வாழ்வாதாரமும் நாளாந்தம் கேள்விக்குள்ளாகிவருகின்ற ஒரு நாடு என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் தமிழ் மக்களுடைய உரிமைகளுக்கான போராட்டம் என்ற பெயரில் அண்மைக்காலமாக த.தே.மக்கள் முன்னணியினர் மேற்கொண்டுவருகின்ற கேலிக்கூத்துக்கள் தமிழ் மக்களை முகம் சுழிக்கவைக்கும்படியாக இருக்கின்றன.
இலங்கை சுதந்திரமடைந்த காலம்முதற்கொண்டு பல்வேறு வடிவங்களினாலான போராட்டங்களைப் பார்த்துப் பங்கெடுத்துவந்த ஈழத்தமிழினம், த.தே.மக்கள் முன்னணியன் தலைவர்கள் (தனியாகச் சென்று) மேற்கொண்டுவருகின்ற கோமாளிக் கூத்துக்களைப் பார்த்து விசனத்தை வெளியிட்டு வருகின்றார்கள்.
மக்களைத் திரட்டிப் போராட்டங்களை மேற்கொள்ளவேண்டிய களங்களுக்கு ஒரு தலைவர் நான்கைந்து ஒளிப்பதிவாளர்களை மாத்திரம் துணைக்கழைத்துக்கொண்டு தனியாப் போவது… அங்கு நின்றுகொண்டிருக்கும் சிறிலங்கா அரசபுலனாய்வாளரை அல்லது காவல்துறையினரை தரம்குறைந்த வார்த்தைகளால் திட்டி வலிந்து வம்புக்கு இழுப்பது… அந்த அரசபடையினனின் பிரதிபலிப்பை ஆதாயமாக்கி அரசில் செய்வது… த.தே.ம.முன்னணிப் பிரமுகர்கள் அண்மைக்காலமாக செய்துவருகின்ற அரசியல் இதுதான்.
எப்படியெப்படியான அரசியல் வடிவங்களையெல்லாம் உலகிற்கு அறிமுகப்படுத்திய ஈழத்தமிழ் இனம் இப்பொழுது த.தே.மக்கள் முன்னணியினரின் இப்படியான மல்லினப்படுத்தப்பட்ட அரசியலைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் விக்கித்துப்போய் நிற்கின்றது.
போராட்டத்திற்காக மக்களைத் திரட்டி மக்கள்திரள் அரசியலை செய்யவேண்டிய தமிழினம் வெறும் அரசியல்தலைவர்கள் மாத்திரம் போராடுவதை வேடிக்கைபார்க்கவேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடத் தயாராகவே இருக்கின்றார்கள் என்பதை ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ போராட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளார்கள்.
எத்தனை தவைந்தாலும் அவற்றை தகர்துக்கொண்டு திரண்டெழுவார்கள் என்பதை மாவீனர் தினங்கள், முள்ளிவாய்க்கால் தினங்கள் என்று பல சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்கள் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட தமிழ் மக்களைக் கைவிட்டுவிட்டு, த.தே.ம.முன்னணியினர் மாத்திரம் தனியாச் சென்று படம்காட்டுவதை தேர்தலை மையப்படுத்திய ‘ஸ்டன்’ என்றுதான் கூறவேண்டி இருக்கின்றது.
த.தே.மக்கள் முன்னணித் தலைவர்கள் செய்துவருகின்ற இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியலை ஈழத்தமிழ் இனம் ரசிக்கவில்லை என்பது மாத்திரமல்ல, இதுபோன்ற அவர்களது செயற்பாடுகளை வெறுப்புடனும் பார்க்கின்றது என்பதுதான் உண்மை.
(பி.குறிப்பு: சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் த.தே.ம.முன்னணி அரசியல்வாதியொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சித்ததாக அந்தக் கட்சியின் பிரமுகர் ஒருவர் செய்திவெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஊடகங்களிலும் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது. அவசரத்தில் எங்களுடைய ஊடகமும் அந்த கட்சிப் பிரமுகரை மேற்கோள் காண்பித்து அந்தச் செய்தியை முன்னுரிமை கொடுத்து வெளியிட்டிருந்தது. ஆனால் அப்படி ஒரு கொலை முயற்சி நடக்கவேயில்லையாம் என்று அங்கு நின்ற சில பொது மக்கள் சாட்சிபகர்கின்றார்கள். குறிப்பிட்ட அந்தச் சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோக்கள் எதிலுமே கொலை முயற்சிக்கான சாட்சிகளைக் காணமுடியவில்லை. பொய்ச்செய்திபோட்டு த.தே.மக்கள் முன்னணியின் கேலமான பிரச்சாரங்களுக்கு துணைபோய்விட்டதாக எங்களது ஊடகத்தை வேறு திட்டித் தீர்க்கின்றார்கள் எமது வாசகர்கள்.
த.தே.ம.முன்னணியின் வீடியோ குழு எடுத்திருந்த வீடியோக்கள் எதிலாவது அந்தக் கொலை முயற்சிச் சம்பவம் தொடர்பான பதிவுகள் இருந்தால் அதனை எமக்கு அனுப்பிவைக்கவும். அத்தோடு த.தே.ம.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது பற்றி சிறிலங்கா காவல்துறையினரிடம் அவர் முறைப்பாடு செய்திருந்தால், அந்த முறைப்பாட்டுப் பிரதியையும் எமக்கு அனுப்பிவைக்குமாறு தயவாய் கேட்டுக்கொள்கின்றோம். )