யாழில் அதிகாலையில் பரபரப்பு: சுற்றி வளைக்கப்பட்ட வீடு - இருவர் அதிரடியாக கைது
யாழில் (Jaffna) இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்ட நபரொருவரின் வீடு காவல்துறை மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை இன்று (22.10.2025) அதிகாலை யாழ்ப்பாணம் - முலவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ். காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு, பெருமளவான இளைஞர்கள் ஒன்று கூடி பெருமெடுப்பில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பகிரங்க கோரிக்கை
அவை தொடர்பிலான காணொளிகள் ரிக் ரொக் (tiktok) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
சட்ட விரோதமான முறையில் இளைஞர்களை ஒன்று கூட்டியமை, இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இளைஞனின் வீட்டில் சோதனை நடாத்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதி கோரி இருந்தனர்.
காவல்துறையினரின் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்று அனுமதி வழங்கியதை அடுத்து, இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இளைஞனின் வீட்டினை அதிரடி படையினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாண தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறை குழுவினர் முற்றுகையிட்டு வீட்டில் தேடுதல் நடாத்தினர்.
தீவிர விசாரணை
வீட்டில் காவல்துறையினர் தேடுதல் நடாத்திய வேளை குறித்த இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில், வீட்டில் தங்கியிருந்த இரு இளைஞர்களையும் காவல்துறையினர் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
அதேவேளை, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
