கொழும்பில் தொடரும் பதற்றம்: கவச வாகனங்களுடன் இராணுவம் குவிப்பு (படங்கள்)
தொடரும் பதற்றம்
கொழும்பில் நேற்று(13) இடம்பெற்ற போராட்டத்தை தொடர்ந்து இன்றும்(14) பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் பிரதான வீதிகளில் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுதம் தாங்கிய கவச வாகனங்களில் இராணுவத்தினர் வலம் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற பாரிய மக்கள் புரட்சியை அடுத்து பிரதமர் அலுவலகம் முற்று முழுதாக ஆர்ப்பாட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டது.
காவல்துறையினர் சரமாரியான துப்பாக்கிச்சுடுகள்
இதனையடுத்து நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் நோக்கில் பாரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன.
குறித்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் சரமாரியான துப்பாக்கிச்சுடுகள், கண்ணீர் புகை பிரயோகம், நீர்த்தாரை பிரயோகம் என்பனவற்றை மேற்கொண்டனர்.
இதன் போது 84 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று (13) பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற வளாகம் பதற்ற நிலையில் காணப்பட்டது.
பதவி விலகாத கோட்டாபய மற்றும் ரணில்
மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அமைவாக கோட்டாபய மற்றும் ரணில் பதவி விலகாத காரணத்தினால் இன்றும் பாரிய ஆர்பாட்டங்கள் முன்னெடுக்ககூடும் என்ற அச்சத்தில் கொழும்பின் பல பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நேற்றைய மோதலின் போது இராணுவத்தினர் ஒருவருடைய T56 எனும் துப்பாக்கி 60 தோட்டாக்களுடன் தவறவிடப்பட்டமையும் அதை ஆர்பாட்டக்காரர்கள் எடுத்து சென்றிருக்ககூடும் என இராணுவத்தினர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.