அதிரும் இந்தியா...! காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் - 27 பேர் பலி
காஷ்மீரின் (Kashmir) முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்திய திடீர் தாக்குதல் முழு இந்தியாவையும் அதிர வைத்துள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance) குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
கண்மூடித்தன துப்பாக்கிச் சூட்டில்
பஹல்காமில் இருந்து சுமார் மூன்று மைல் (5 கி.மீ) தொலைவில் உள்ள பைசரன் புல்வெளியைப் பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் 27 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி
இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
தனது பதிவில் மேலும் குறிப்பிடுகையில், காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்தி மிகவும் கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது.
உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.
