இந்தியாவை உலுக்கிய சுற்றுலா பயணிகள் படுகொலை: பொறுப்பை ஏற்ற பயங்கரவாத அமைப்பு!
தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத அமைப்பு
கடந்த 2023 ஆம் ஆண்டு, பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாதிகளை ஆட்சேர்ப்பு செய்தல், பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்தல் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கடத்துதல் போன்ற பிரச்சாரங்களுக்காக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் TRF ஐ "பயங்கரவாத அமைப்பு" என்று இந்திய உள்துறை அமைச்சகத்தினால் (MHA)அறிவிக்கப்பட்டது.
காஷ்மீரில் பத்திரிகையாளர்களுக்கு TRFஅமைப்பு மிரட்டல் விடுத்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில், நேற்றையதினம் (22) TRF பயங்கரவாத அமைப்பினால் தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதோடு, 40 பேருக்கும் மேலதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
முழு பலத்துடன் பதிலடி
இந்த நிலையில், குறித்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்ததோடு, தாக்குதலில் பின்புலத்தில் உள்ளவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
அத்தோடு, இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்றும் முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெரிவித்துள்ளார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
